November 7, 2013

ஒரு பணியிலிருந்து இன்னொரு பணிக்கு மாறும்போது....


நமது வாழ்க்கையின் மிகப்பெரிய ஆதாரம் பணம். அந்த பணத்திற்காகவே மக்கள் பணிபுரிகிறார்கள். அந்த வகையில், முடிந்தளவு அதிக சம்பளம் வாங்குவதே பலரின் குறிக்கோளாக இருக்கிறது. பணி திருப்தி மற்றும் வாழ்க்கை திருப்தி என்பது பலருக்கும் இரண்டாம்பட்சம்தான்.

ஒரு நிறுவனத்தில் பணியாற்றிவரும் ஒருவர், தான் பணியாற்றிவரும் நிறுவனத்தில் வாங்கும் ஊதியத்தைவிட, வேறு நிறுவனம் ரூ.5000 முதல் ரூ.10,000 வரை அதிகமாக கொடுக்க முன்வந்தால், வேறு எதைப்பற்றியும் யோசிக்காமல், உடனேயே அப்பணிக்கு மாறிவிட துடிக்கின்றனர். மாறியும் விடுகின்றனர். ஆனால், வெறுமனே சம்பளம் என்பதற்கு பின்னால், யோசிக்க வேண்டிய பல அம்சங்கள் இருக்கின்றன.

எங்கோ ஓரிடத்தில்!

உங்களுக்கு பணி வாய்ப்பை அளிக்கும் புதிய நிறுவனம், உங்களுக்கு கார்பரேட் அலுவலகத்தில் பணி என்று சொல்லிவிட்டு, பின்னர், உங்களை அதன் ஏதோவொரு தூரத்திலுள்ள கிளைக்கோ அல்லது பிளான்டிற்கோ அனுப்பிவிட வாய்ப்புண்டு.

அந்த இடங்களில், சரியான பள்ளிக்கூட வசதிகளோ, போக்குவரத்து வசதிகளோ மற்றும் இதர அடிப்படை வசதிகளோ முறையாக இருக்காது. எனவே, சம்பந்தப்பட்டவரது குழந்தைகளும், குடும்ப உறுப்பினர்களும் நெருக்கடிக்கு ஆளாகலாம்.

மொழி, கலாச்சார பிரச்சினை

மேலும், பெரிய நிறுவனமாக இருந்தால், அதன் கிளைகள் வெளி மாநிலங்களிலும் இருக்கலாம். எனவே, அங்கே நீங்கள் மாற்றப்பட்டால், மொழி பிரச்சினையில் திண்டாட வேண்டிய நிலை ஏற்படலாம். நீங்கள் மட்டுமல்ல, உங்கள் குடும்பமும்தான்.

மொழிப் பிரச்சினை மட்டுமின்றி, மாநிலம் மாறிச் செல்லுகையில், கலாச்சார பிரச்சினைகளும் மிக அதிகம். அங்கேயுள்ள உணவுப் பழக்கம் உங்களுக்கு ஒத்துவராமல் போகலாம் மற்றும் அதைப் பழகிக்கொள்ள வேண்டிய நிர்ப்பந்தம் எழும். மேலும், அங்கேயுள்ள காலநிலையும் உங்களுக்கு பெரிய பிரச்சினையை ஏற்படுத்தும் வாய்ப்புள்ளது.

பணி திருப்தி

முந்தையப் பணி உங்களுக்கு திருப்தியானதாகவும், சிக்கல்கள் குறைவானதாகவும் இருந்திருக்கும். ஆனால், அதிக சம்பளம் என்ற ஒரே காரணத்திற்காக வேறு பணிக்கு மாறியிருப்பீர்கள். ஆனால், அந்தப் பணி உங்களுக்கு திருப்தியானதாக அமையாமல் போகலாம்.

இதன் காரணமாக நமது சந்தோஷம் காணாமல் போய், ஏன் இங்கு வந்தோம் என்று வருந்துமளவுக்கு தள்ளப்படுவோம். எனவே, ஊதியம் மட்டுமே ஒருவருக்கு பணி திருப்தியை கொடுத்துவிடாது.

முன்னேற்றமின்மை

நாம் மாற நினைக்கும் பணியில், சம்பளம் கூடுதலாக கிடைக்கலாம். ஆனால், அதில் எதிர்கால முன்னேற்றத்திற்கான வாய்ப்புகள் எந்தளவு இருக்கின்றன என்பதை கட்டாயம் நாம் பார்க்க வேண்டும். இல்லையெனில், இன்று சில ஆயிரங்களுக்காக ஆசைப்பட்டு நாம் அவசரப்பட்டு பணி மாறினால், நாளை கவுரவமான பதவி உயர்வையும், வேறு பல சலுகைகளையும் இழக்க நேரிடலாம்.

மீண்டும் பழைய இடத்திற்கே...
   
ஒருவர், அதிக சம்பளம் கிடைக்கிறது என்று அவசரப்பட்டு, வேறு நிறுவனங்களுக்கு மாறுகிறார். அந்த நிகழ்வின்போது, பழைய நிறுவனம் அவரை தக்கவைக்க முயற்சிக்கிறது. முடியாதபோது, அவரின் அதுவரையிலான சேவையைப் பாராட்டி, அவருக்கு சிறப்பான வழியனுப்பு விழா நடத்தப்பட்டு அனுப்பி வைக்கப்படுகிறார்.

ஆனால், புதிதாக போன இடத்தில் ஒத்துவராமல், அவர் மீண்டும் பழைய நிறுவனத்திற்கே வந்து, அதே வேலையை தருமாறு கேட்கும் தர்மசங்கடமான சூழல் சில சமயங்களில் எழுகிறது. ஆனால், அவரது பணியிடம் வேறு ஒருவரால் நிரப்பப்பட்டிருக்கும். எனவே, அவருக்கு வேறுவொரு முக்கியமற்ற பணி ஒதுக்கப்படலாம்.

அப்போது, தனது பழைய மரியாதை மற்றும் முக்கியத்துவம் ஆகியவற்றை இழந்து, அவர் பரிதாபகரமான நிலையில், பழைய நிறுவனத்தில், தர்மசங்கடமான சூழலில் இருக்க வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்படும். மேலும், வேறுசிலரோ, பழைய நிறுவனத்திற்கு திரும்ப மனம் இடம்கொடுக்காமல், புதிதாக சேர்ந்த இடத்திலிருந்து ராஜினாமா செய்துவிட்டு, வேறு பொருத்தமான பணிக்காக அலைந்து கொண்டிருப்பார்கள் அல்லது வேறு சரியான பணி கிடைக்காமல், அடிக்கடி மாறிக்கொண்டே இருப்பார்கள்.

எனவே, ஒரு பணியிலிருந்து இன்னொரு பணிக்கு மாறுவதற்கு முன்னதாக, வெறுமனே சம்பளத்தை மட்டும் கணக்கில் வைக்காமல், பணி திருப்தி, பணிச் சூழல், நிறுவனத்தின் தன்மை, சக பணியாளர்கள், பணிபுரியும் இடம், பணி மாறுதலுக்கான வாய்ப்புகள், குடும்பச் சூழல் மற்றும் எதிர்கால வளர்ச்சி ஆகிய அனைத்து அம்சங்களையும் கணக்கில் கொண்டு முடிவெடுப்பதே புத்திசாலித்தனம்.

மனதில் இருக்கும் சக்தியை பயன்படுத்துங்கள்..!!!


மின் உற்பத்தி நிலையத்தில் தொடரந்து மின்சக்தி உற்பத்தியாகி வருதைப் போன்று,மனதில் ஆக்கச் சக்தி உற்பத்தியாகி வருகிறது.  கிணற்றிலிருந்து தண்ணீர் இறைக்க இறைக்க ஊற்றுநீர் சுரந்து நீர் மட்டம் பழைய அளவுக்கு வந்துவிடுதைப் போன்று,நாம் செலவு செய்யும் சக்தி சமமாக உங்களுடைய மனதில் புதிய சக்தி உருவாகிவிடுகிறது.

சாம்பல் பூத்துக்கிடக்கும் நெருப்பை ஊதி கொழுந்துவிட்டு எரியச் செய்வதைப் போன்று, மனதில் முடங்கிக்கிடக்கும் சக்தியை எண்ணங்களின் உதவியைக்கொண்டு விஸ்வரூபமாக வெளிவரச்செய்ய முடியும்.  சாதாரண எண்ணங்களை நினைத்து வருபவன் பூமியில் நெளியும் புழுவைப் போன்று அவலமாக வாழ்ந்து வருவான்.. பெரிய எண்ணங்களை நினைத்து வருபவன், ராக்கெட்டைப் போன்று சீறிப் பாய்ந்து, மனித இனத்தை முனேற்றப் பாதையில் அழைத்துச்செல்லுவான்.. 


தன்னிடம் இருக்கும் திரண்ட செல்வத்தை சிறிது கூட பயன்படுத்திக்கொள்ளாமல் சாவைத் தழுவும் கஞ்சனைப் போன்று, நிறைய பேர்கள் தங்கள் மனதில் மறைந்திருக்கும் சக்தியை சிறிதுகூட பயன்படுத்திக் கொள்ளாமல் மிகவும் சாதாரணமான வாழ்க்கை வாழ்ந்து மறைந்து வருகிறார்கள்.  தன் மனதில் இருக்கும் சக்தியை முழுக்கப் பயன்படுத்திக்கொள்ள ஒருவன் பயன்தரும் எண்ணங்களை முதலில் நினைக்க வேண்டும்.

கடினமான உழைப்பின் துணையைக் கொண்டு ஒருவன் தான் நினைத்தவைகளைச் செய்து முடித்து, தன்னை ஒரு சரித்திக் கதாநாயகனாகவோ, மாபெரும் ஆராச்சியாளனாகவோ, உலகம் போற்றும் இலக்கியப் படைப்பாளியாகவோ அல்லது தொழில் சாம்ராஜ்யத்தின் மகா சக்கரவர்த்தியாகவோ தன்னை உயர்த்திக்கொள்ள முடியும்.


எண்ணங்கள் கனவு போன்றவைகள்தான்.. கடினமான உழைப்பின் மூலம்தான் நீங்கள் உங்கள் கனவுகளை நனவாக்க முடியும்.


நிறைய பேர்கள், சுயநலம் கலந்த முன்னேற்றம் தராத எண்ணங்களை அனைத்து நேரமும் நினைத்து வருவதைப் பழக்கமாக்கிக் கொண்டிருக்கிறார்கள்.  ஒரே மாதிரியான எண்ணங்களை நினைப்பதைத் தவிர்த்து, புதிய மாபெரும் இலட்சியங்களைப் பற்றி நினைத்து வருவதைப் பழகமாக ஏற்படுத்திக்கொள்ளுங்கள்..

இந்தப் பழக்கம் உங்களிடம் இருக்கும் ஆக்கச் சக்தியை பல மடங்களுகளாக அதிகரிக்கும்படி செய்து விடும்.  கற்பனைத் திறனை வளர்த்து, புதிய சிந்தனைகளை நினைத்து வருபவனால்தான், பல சாதனைகளைப் படைக்க முடியும்.

'ஏழ்மையும், சௌகரியங்கள் நிறைந்த வாழ்க்கையும் எண்ணங்களின் குழந்தைகள்தான்' என்று ஒரு அறிஞர் கூறியிருக்கிறார்.. உண்ண உணவும், உடுக்க உடையும், இருக்க இடமும் கிடைக்காமல் அவதிப்பட்டு வருபவன், தன் இயலாமையையும், இல்லாமையையும் நினைத்து அழுது புலம்பி கண்ணீர் விட்டுக் கொண்டிருப்பவனாகத்தான் இருப்பான். 'என்னிடம் திறமையிருக்கிறது. மற்றவர்கள் செய்து முடித்திருப்பதை என்னாலும் செய்ய முடியும்' என்ற நம்பிக்கை கலந்த எண்ணங்களை நினைத்து வருபவன், நிறைய பணம் சம்பாதித்து அனைத்து சௌகரியங்களையும் அனுபவித்து வாழ்ந்து வருவான்...

நம் உள்ளத்தில் ஓடும் எண்ணங்களை நாம் மாற்றிக்கொள்ளும்போது, நம் வாழ்க்கையே முற்றிலும் மாறிவிடுவதை நாம காண முடியும்.

எண்ணங்களுக்கு எல்லையே இருக்கக்கூடாது.  ஆனால் அநேகமாக அனைவரும் தங்கள் எண்ணங்களுக்கு எல்லைகளை ஏற்படுத்திக்கொண்டு மிகவும் குறுகிய வட்டத்திற்குள் வாழ்ந்து வருகிறார்கள். பெரிய எண்ணங்கள்தான் மாபெரும் மாற்றங்களை உருவாக்கும்.. வாழ்க்கையில் முன்னேறி நல்லவைகளைச் செய்ய விரும்புகிறவர்கள், தங்களுடைய எண்ணங்களின் எல்லைகளை விஸ்தரித்துக் கொண்டே செல்ல வேண்டும்.

உங்களுடைய எண்ணங்களின் பிரதி பிம்பமாகத்தான் நீங்கள் இருக்கப் போகிறீர்கள்..

நீங்கள் கடந்த காலத்தில் எப்படிப்பட்ட எண்ணங்களை நினைத்து வந்திருக்கிறீர்கள் என்பதைப ்பொறுத்து நீங்கள் தற்போது வாழ்ந்து வரும் வாழ்க்கை அமைந்திருக்கும். இதுநாள் வரையில் நீங்கள் கண்டு வந்த ஒட்டுமொத்த சிந்தனைதான் உங்களை இப்போது நீங்கள் இருக்கும் நிலைக்கு கொண்டு வந்து சேர்த்திருக்கிறது என்பதை நாம் முழுவதும் உணரவேண்டும்..

இதைப் போன்றே அடுத்து வரும் நாட்களிலும் நம் எண்ணப்படியே நமது வாழ்க்கையும் அமையும்.

உதாரணத்திற்கு, குமாஸ்தா வேலையே தனக்கு போதும் என்று நினைத்து வருபவன் தன்னை அதிகாரியாக நிச்சயம் உயர்த்திக்கொள்ள முடியாது.

எனவே எண்ணங்களை மேம்படுத்துங்கள்.. உங்கள் மனசக்தியை முழுவதுமாக பயன்படுத்துங்கள்.. நிச்சயம் வாழ்வில் உயர்நிலையை அடையலாம்.. உலகப் புகழ் பெறலாம்.



நேர்மறை எண்ணத்தை எவ்வாறு மேம்படுத்தலாம்?



ஒரு குறிப்பிட்ட விஷயத்தைப் பற்றி ஒரு மனிதர் எவ்வாறு உணர்கிறார், சிந்திக்கிறார், அதுதொடர்பாக அவரது நடத்தைகள் எப்படி இருக்கிறது என்பதை வைத்தே, ஒரு தனிமனிதனின் குணநலன் தீர்மானிக்கப்படுகிறது. இந்த உலகில் பல கோடிக்கணக்கான மனிதர்கள் இருக்கையில், அவர்களில் ஏன் வெகு சிலர் மட்டுமே வெற்றியடைகிறார்கள்? என்ற கேள்விக்கு மிக எளிதான் விடையை அளிக்கலாம். வெற்றியடைபவர் நேர்மறை சிந்தனையையும், தோல்வியடைபவர் எதிர்மறை சிந்தனையையும் கொண்டுள்ளனர்.
உதாரணமாக, தாகம் கொண்ட ஒரு மனிதர், ஒரு வீட்டில் நுழைகையில் அவருக்கு பாதியளவு தண்ணீர் நிரம்பிய ஒரு தம்ளர் தரப்படுகிறது. அதைப் பார்த்ததும் அவர் திருப்தியடைந்தால், அவர் நேர்மறை எண்ணம் கொண்டவர் என்று அர்த்தம். மாறாக, அதிருப்தியடைந்தால், எதிர்மறை எண்ணம் கொண்டவர் என்று அர்த்தம். ஏனெனில், திருப்தியடைபவர், பாதியளவு தண்ணீர் நிரம்பியுள்ளதைப் பார்க்கிறார். எதிர்மறை எண்ணம் உள்ளவரோ, அந்த தம்ளர் பாதியளவு காலியாக இருப்பதைப் பார்க்கிறார். எனவே எதிர்மறை எண்ணம் உள்ளவரைவிட, நேர்மறை எண்ணம் உள்ளவர் சிறிய விஷயங்களில் அதிக திருப்தியடைகிறார்.
மேலும், சுய நம்பிக்கை, வெற்றிக்கான தெளிவான திட்டமிடுதல் போன்ற பண்புகளும் அவருக்கு இருப்பதால் அவரின் வெற்றி மிகவும் எளிதாகிறது.
"ஒருவர் தோல்வியடைந்தால் அவருக்கு ஏமாற்றம் கிடைக்கத்தான் செய்யும். அதற்கு பயந்து ஒருவர் முயற்சியே செய்யாமல் இருந்தால் அவர் பிணத்திற்கு சமம்"
என்று ஒரு பொன்மொழி உண்டு.
நாம் இந்த வகையில்தான் சிந்திக்கப் பழக வேண்டும். நீங்கள் எப்படி சிந்திக்கிறீர்களோ, அவ்வாறே உங்களின் நடத்தையும் இருக்கிறது. நேர்மறை எண்ணம் இருந்தால், சிறுசிறு தடைகள் உங்களின் லட்சியத்தை அடைவதை தடைசெய்ய முடியாது.
"நீ எங்கே இருக்கிறாய், உன்னிடம் என்ன இருக்கிறது என்பதை வைத்து உன்னால் முடிந்ததை செய்"
"உனக்கு ஒன்று பிடிக்கவில்லை எனில், அதை மாற்றிவிடு. ஒருவேளை அதை மாற்ற முடியவில்லை என்றால், உன்னை நீ மாற்றிக்கொள். அதற்காக குறை கூறிக்கொண்டு இருக்காதே"
"ஒரு உண்மை அறிவாளி என்பவர் 1% மட்டுமே உந்துதலைக் கொண்டிருப்பார். ஆனால் 99% கடும் முயற்சியைக் கொண்டிருப்பார்"
போன்றவை பிரபலமாக பொன்மொழிகள்.
* நமது லட்சியத்தை அடைய, நமது உடலும், மனமும் ஒருங்கிணைந்து இயங்குகிறது. நமது பணி மற்றும் சமூக சூழல் போன்றவை நமது எண்ணம் மற்றும் செயல்பாட்டில் முக்கியப் பங்கை வகிக்கின்றன.
* ஒரு நேர்மறை சிந்தனையாளர், தடைக் கற்களைப் படிக்கற்களாகவே நினைக்கிறார். ஒரு தோல்வியைப் பற்றி சிந்திக்கும்போது, அது எந்தளவு நம்மை காயப்படுத்தியது என்பதைப் பற்றி சிந்திக்காமல், அது எதனால் ஏற்பட்டது என்பதைப் பற்றி சிந்தித்து, அது மீண்டும் நிகழாமல் பார்த்துக்கொள்ள வேண்டும்.
* நேர்மறை எண்ணம் கொண்டவர்கள், இயற்கையாகவே அந்த எண்ணத்துடன் பிறக்கிறார்களா? அல்லது காலப்போக்கில் அந்த எண்ணத்தை வளர்த்துக் கொள்கிறார்களா? என்பது பலரின் கேள்வியாக இருக்கிறது. பொதுவாக, ஒரு மனிதனின் குணநலன் என்பது, அவரது வாழ்க்கையின் உருபெறும் காலகட்டத்தில் வடிவமைக்கப்படுகிறது. ஒரு மனிதனின் உருவாக்க காலகட்டமானது, குடும்பம், பள்ளி, சமூகம், மீடியா, தொலைக்காட்சி, அரசியல், மதம் மற்றும் கலாச்சாரப் பிண்ணனி போன்ற பல விஷயங்களை உள்ளடக்கியது மற்றும் அந்த அனைத்து அம்சங்களும் ஒரு மனிதனின் மனநிலை உருவாக்கத்தில் முக்கியப் பங்கை வகிக்கின்றன.
* எதிர்மறை எண்ணம் கொண்ட மனிதர்களுடன் வாழும்போதும், அத்தகைய கலாச்சாரத்தைப் பின்பற்றும்போதும் ஒருவரால் நேர்மறையாக சிந்திப்பது கடினம். எனவே, அத்தகைய ஒரு எதிர்மறை அம்சத்திலிருந்து விடுபடுவதைப் பற்றி நாம் சிந்திக்க வேண்டும்.
"ஒரு இயந்திரம் 50 சராசரி மனிதர்களின் வேலைகளை செய்யும். ஆனால் எந்த ஒரு இயந்திரமும், ஒரு குறிக்கோளுடைய அசாதரண மனிதனின் வேலையை செய்துவிட முடியாது"
இதுவும் ஒரு புகழ்பெற்ற பொன்மொழிதான்.
ஒரு நேர்மறை எண்ணம் கொண்ட மனிதரை எவ்வாறு கண்டுபிடிப்பது மற்றும் அவரது குணாதிசயங்கள் எவ்வாறு இருக்கும்? இது மிகவும் எளிது.
* நேர்மறை மனிதர்கள் பணிவானவர்களாகவும், அக்கறையுள்ளவர்களாகவும், நம்பிக்கை மற்றும் பொறுமை உள்ளவர்களாகவும் இருப்பார்கள். மேலும், முயற்சிசெய்ய எப்போதுமே ஆவலாக இருப்பார்கள். அந்த மனிதர்களின் எதிர்பார்ப்பு மிகவும் பெரியளவில் இருக்கும். அத்தகைய மனிதர்கள் எல்லாவித சூழல்களிலும் வரவேற்கப்படுவார்கள்.
* அத்தகைய மனிதர் எங்கு சென்றாலும், அங்கிருக்கும் சூழலையே மாற்றி விடுவார். நடந்துவிட்ட துன்பங்களை இறந்த காலமாக கருதி, சிறப்பான எதிர்காலத்தைப் பற்றி சிந்திப்பவர்களாக இருப்பார்கள்.
* ஒரு மனிதர் நேர்மறை எண்ணமுள்ளவராக மாறுவதில் ஏராளமான அனுகூலங்கள் உள்ளன. இதன்மூலம், உற்பத்தி அதிகரிக்கும், குழுமுயற்சி ஊக்குவிக்கப்படும், பணி செய்யும் சூழல் மேம்படும், பணியின் தரம் அதிகரிக்கப்படும் மற்றும் மனித உறவுகள் மேம்படும், மன அழுத்தத்தைக் குறைக்க உதவும், நம்பிக்கையை அதிகரிக்கும் மற்றும் அத்தகைய எண்ணம் உள்ள மனிதரின் தோற்றத்திலும் நல்ல மாறுதல் ஏற்பட்டு, பலரை கவரும் விதத்தில் இருக்கும்.
* நேர்மறை சிந்தனையால் மேற்கண்ட ஏராளமான நன்மைகள் ஏற்படும் அதேவேளையில், எதிர்மறை எண்ணத்தால், பகைமை சிந்தனை, ஆரோக்கிய குறைபாடு, கசப்புணர்வு மற்றும் கடும்கோபம் போன்றவை ஏற்படும். ஒரு எதிர்மறை சிந்தனையாளர் தன்னை கெடுத்துக்கொள்வது மட்டுமின்றி, தான் சார்ந்த ஒட்டுமொத்த சூழலையும் கெடுக்கிறார். அவரது வாழ்க்கையில், அனைத்துவித உறவுகளுமே நிலையற்றதாகவே இருக்கும்.
* எதிர்மறை எண்ணங்கள் இவ்வளவு ஆபத்தானவை என்று தெரிந்தபோதும், பலர் ஏன் தங்களை மாற்றிக்கொள்வதில்லை. அதற்கு காரணம், அவர்கள் தங்களின் எண்ண ஓட்டத்தில் மாற்றத்தை கொண்டுவர விரும்புவதில்லை மற்றும் அந்த மாறாத நிலையின் ஒரு பகுதியாகவே அவர்கள் இருக்கிறார்கள். மாற்றமானது, நன்மையாக இருந்தாலும், தீமையாக இருந்தாலும் அவர்கள் ஏற்றுக்கொள்ள விரும்புவதில்லை. எனவே, இத்தகைய மனிதர்கள் முதலில் தாங்கள் வாழும் சூழலுக்கேற்ப தங்களை மாற்றிக்கொள்ள முயல வேண்டும்.
* ஒருவர் மற்றவரின் மனதை வசியம் செய்து மாற்றிவிட முடியாது. ஒவ்வொருவருமே, மனதளவில், மாற்றத்திற்கான கதவை திறக்க முடியாதவாறு வாயிற்காப்போனாக நிற்கிறோம். எனவே ஒருவர் மனதை விவாதம் செய்தோ அல்லது உணர்ச்சி வகையிலோ மாற்றிவிட முடியாது. அந்த முயற்சியானது ஒவ்வொருவரின் உள்மனதிலிருந்து தொடங்க வேண்டும்.

எண்ணங்களை மேம்படுத்துங்கள்! வாழ்க்கையை வெற்றி கொள்ளுங்கள்!





இன்று காலை,டொயோடா  கார் தயாரிப்பு நிறுவனம் சந்தித்து வரும் பிரச்சினைகளைக் குறித்து வெளியாகி இருந்த செய்திக் கட்டுரைகளைப் படித்துக் கொண்டிருந்தேன். அதைப்பற்றிச் சிந்தித்துக் கொண்டிருந்த நேரத்தில் அவுட்சோர்சிங் பற்றி திரு டோண்டு ராகவன் எழுதிய ஒரு பதிவில் என்னுடைய பின்னூட்டங்களுக்குப் பதில் சொல்வதாக நினைத்துக் கொண்டு, இரு வேறு பதிவர்கள் தங்களுடைய அரசியல் காழ்ப்புணர்வு, பதிவில் பேசப்பட்டிருந்த விஷயத்தை முழுக்க மறந்து விட்டு, விவாதங்களைத் திசைதிருப்புகிற மாதிரியாக எழுதியிருந்ததைப் படிக்கவும் நேர்ந்தது.

நேற்றுத் தான் மனிதவளம் என்ற  குறியீட்டில் Just Enough Anxiety என்ற தலைப்பில் திரு ராபர்ட் ரோசென் எழுதியிருந்த புத்தகத்தைப் பற்றிய எனது மதிப்பீட்டை, கொஞ்சம் மறுபடியும் திருத்தம் செய்து மீள் பதிவாக எழுதியிருந்தேன்.

சுய முன்னேற்றம், மனித வளம், எண்ணங்களை மேம்படுத்துதல், மேலாண்மை, நிர்வாகம், சந்தைப் படுத்துதல் முதலான எனக்குப் பிடித்தமான துறைகளில் படித்ததும் பிடித்ததுமான புத்தகங்களைப் பற்றியும் எழுத வேண்டும் என்ற எண்ணம்,  இந்த மாதிரி எதிர்மறையான கருத்துக்களைப் படித்த பிறகு, இன்னமும் வலுவானது.

எசைப்பாட்டு என்ற அளவில் அவர்கள் தொனியிலேயே நிச்சயமாக இந்தப் பதிவுகளைத் தொடரப்போவதில்லை என்பதோடு, இந்தப் பக்கங்கள் புத்தகங்களுக்காக மட்டும், வாசித்த அனுபவங்களைப் பகிர்ந்து கொள்வதற்காக மட்டுமே என்ற உறுதியை இங்கே பதிவு செய்கிறேன்.

டொயோடா வே என்ற புத்தத்தை  என் சேகரத்தில் தேடிக் கொண்டிருந்தபோது, பதினேழு வருடங்களுக்கு முனனால் வாங்கிய "எண்ணங்களை மேம்படுத்துங்கள்" என்ற புத்தகம் கையில் கிடைத்தது. டாக்டர் மரியான் ரூடி காப்மேயர் எழுதிய Thoughts to build on புத்தகத்தின் தமிழ் வடிவம்
இது.

திரு பி சி கணேசனின் சரளமான மொழிபெயர்ப்பில் கண்ணதாசன் பதிப்பக வெளியீடாக வெளி வந்தது. நீண்ட நாட்களாகிவிட்ட படியால், மறுபடியும் இந்தப் புத்தகத்தை இன்று படித்துமுடித்துவிட்டேன்.

படித்தவுடனேயே, இந்தப் புத்தகம் தோற்றுவித்த அனுபவத்தைப் பகிர்ந்து கொள்ளவேண்டும் என்பதற்காகவே இந்தப் பதிவு!

எண்பது சிறு அத்தியாயங்களாக, புத்தகம் என்றால் ஒரே  தொடர்ச்சியாக இருக்கவேண்டும் என்ற கட்டுப்பாடு எதுவுமில்லாமல், ஒவ்வொரு அத்தியாயமும் ஒரு மாறுபட்ட சிந்தனையை அறிமுகப் படுத்துகிற விதத்தில் சுமார் முன்னூறு பக்கங்களில் இந்தப் புத்தகம் எழுதப் பட்டிருக்கிறது.

உங்களுக்காகச் சிந்திப்பதாக, அல்லது உங்களை அப்படியே தலைகீழாகப் புரட்டிப் போட்டு விடுவதாக எந்த ஒரு பொய்யான வாக்குறுதியும் இல்லாமல், படிக்கும்போது, உங்கள் அனுபவங்களைத் தொட்டு நீங்களே தொடர்ந்து யோசிக்கத் தூண்டுகிற விதத்தில் எழுத பட்டிருக்கும் புத்தகம் இது!

ஆங்கில மூலம் வெளிவந்து முப்பத்தொன்பது ஆண்டுகள் ஆகிவிட்டன என்ற எண்ணமே எழாமல், இன்றைக்கும் பொருந்துகிற மாதிரிப் பொதுவான நடையில், சிந்தனையில் சுய முன்னேற்றத்திற்கு உதவும் வகையில் இருக்கக் கூடிய புத்தகம் இது.

தமிழில், இந்தப் புத்தகத்தின் இன்றைய விலை என்ன என்பது எனக்கு தெரியவில்லை. ஆங்கிலத்தில் 2007 பதிப்பு ரூபாய் அறுபத்தைந்துக்குக் கிடைக்கிறது.  இந்தப் புத்தகத்தில் இருந்து, ஒரு சிறு பகுதி, நீங்களே படித்து, புத்தகத்தின் அருமையை மதிப்பிடுவதற்குஉதவியாக!.


"பல ஆண்டுகளுக்கு முன், எல்லாமே ஒன்று கருப்பாக இருக்க வேண்டும், அல்லது வெண்மையாக இருக்க வேண்டும் என்று நான் எண்ணியது உண்டு. ஒன்று, இந்தக் கோடியில் நிற்பேன். அல்லது, அந்தக் கோடியில் நிற்பேன். அசையாமல் நிற்பேன். என்ன இழப்பு நேரிட்டாலும் அந்த நிலையிலேயே உறுதியாக நிற்பேன்.

என்னுடைய நம்பிக்கைகள் வெறும் நம்பிக்கையாக மட்டும் இருக்காது. மற்றவர்களுக்கு சவால்களாகவும் இருக்கும்.

நிர்வாகி ஒருவர், வேலை செய்யும் தன்னுடைய மேஜையின் மீது ஓர் அறிவிப்பை வைத்திருந்தார். "எதையும் சிந்தித்து முடிவெடுங்கள். நான் சொல்கிறபடி  செய்யுங்கள்!" இது தான் அந்த அறிவிப்பு!

நானும் இந்த ரகம் தான். அது அந்தக் காலம். இப்போது முன்பை விட வயது எனக்குக் கூடி விட்டது. ஆண்டுகள் செல்லச் செல்ல நானும் மாறிவிட்டேன். சரியாகச் சொல்ல வேண்டுமானால், அனுபவங்களில் இருந்து கற்றுக் கொள்ளத் தொடங்கி விட்டேன்.

மற்றவர்கள் வெற்றி பெறுவதைப் பார்த்துப் பார்த்து....அமைதியாக...நளினமாக...நிச்சயமாக....வெற்றிக்கான வழி எனக்கு விளங்க ஆரம்பித்து விட்டது. முன்னிலும் சிறந்த வாழ்க்கை எனக்குப் புரிய ஆரம்பித்து விட்டது.

என்னைச் சுற்றி நான் எழுப்பிக் கொண்ட கோட்டைச் சுவர்களைத் தாண்டி நான் வளர ஆரம்பித்து விட்டேன். கோட்டையின் அசையாத தன்மையே அதை ஒரு சிறைச் சாலையாக்கி விடுகிறது.

தற்காத்துக் கொள்ள எதுவும் இல்லாதபோது, கோட்டை எதற்காக? லட்சியத்தை நோக்கி முன்னேறிச் செல்வதில் கோட்டையின் பங்கு எதுவும் இல்லை. முன்னேறி நகர்ந்து சென்று கொண்டே இருப்பது தானே வாழ்க்கை!

வாழ்க்கையில், சாம்பல் நிறமான பகுதி ஒன்று இருப்பதையும் புரிந்துகொண்டேன். எல்லாமே, ஒன்று வெள்ளையாகவோ, அல்லது கருப்பாகவோ தான் இருக்க வேண்டிய அவசியமே இல்லை. எதுவுமே முற்றிலும் சரியானதாகவோ தவறானதாகவோ இருக்க வேண்டிய அவசியமுமில்லை! எல்லாமே கருப்பாகவோ அல்லது வெளுப்பாகவோ இளைஞர்களுக்குத் தோன்றலாம். முதிர்ச்சி அடையாத வளர்ந்தவர்களுக்கும் தோன்றலாம். வேலை நிறுத்தம், கண்டன ஊர்வலம், உள்ளிருப்பு வேலை நிறுத்தம் போன்ற அனைத்திற்கும் இதுவே காரணம்.

இளம்பருவத்தினரின் நடவடிக்கைகளைப் பார்த்து உலகம் புன்முறுவல்  பூக்கிறது. அவர்களின் செயல்களைத் தங்கள் சுயநலத்திற்காகப் பயன்படுத்திக் கொள்பவர்களைப் பார்த்து அல்ல! ஆனால், உலகம் தன்னுடைய காரியங்களை சாம்பல் நிறப் பகுதிகளில் தான் நிறைவேற்றிக் கொள்கிறது. அனுபவம் போதாத நாட்களில், இந்த உண்மை எனக்குப் புரியவில்லை.

கருமையின் விளிம்பும், வெண்மையின் விளிம்பும் ஒன்றிக் கலக்கிற பகுதிதான், நான் இது வரை சொன்ன சாம்பல் நிறப்பகுதி. ஒருவரை ஒருவர் புரிந்து கொண்டு, இணக்கம் ஆகிற பகுதியும் இது தான்!

சாம்பல் நிறப்பகுதியில் தான்  ஒவ்வொருவருடைய கருத்தும் கவனத்துடன், மரியாதையுடன் பரிசீலிக்கப் படுகிறது. இங்கே தான் ஒவ்வொருவரும் மற்றவருக்குக் கொஞ்சம் கொஞ்சம் விட்டுக் கொடுத்துப் பரஸ்பர ஆதாயத்தைப் பெறுகிறார்கள். இந்தப் பகுதியில், பேரங்கள் கொஞ்சம் கடுமையானதாக இருக்கலாம், கொஞ்சம் சாதுர்யமானதாக இருக்கலாம். ஆனால், தொடர்ந்து முயற்சி செய்தால், ஒருவரை ஒருவர் புரிந்துகொள்ளவும், ஒத்துழைப்பைப் பரிமாறிக் கொள்ளவும் இந்தப் பகுதி தான்  வழிவகுத்துக் கொடுக்கும் இடமாகவும்  இருக்கிறது.

சாம்பல் நிறப்பகுதியில், தொடர்ந்து பேச முயற்சித்தோமேயானால், பயனுள்ள முடிவுகளுக்கு வர முடியும். இல்லை என்றால் கருப்பு-வெள்ளை என்ற நேரெதிர் நிலையில் தான் நின்று கொண்டே இருக்க வேண்டும்.

இந்த சாம்பல் நிறப்பகுதியில் தான், கூட்டுச் சிந்தனை உருவாகிறது. அனைவருக்கும் பொதுவான, ஏற்றுக் கொள்ளக் கூடிய பயனுள்ள முடிவுகளும் இங்கே தான் சாத்தியமாகிறது.

'உலகத்தில் எல்லா விஷயங்களுமே இப்படித்தான்-- ஒன்று கருப்பாகவோ அல்லது வெளுப்பாகவோ தான் இருந்தாக வேண்டுமென்ற அவசியமே இல்லை' என்பதைப் புரிந்துகொள்ளும் முதிர்ச்சி அடைந்ததற்காக சந்தோஷப்படுகிறேன். கருத்துக்கள், அபிப்பிராயங்கள் எல்லாம் சங்கமிக்கிற இடம் தான் சாம்பல் பகுதி.  இங்கே நல்லெண்ணத்தோடு சந்திக்க முடிகிறவர்களுக்கு, தங்களுடைய கருத்து வேற்றுமைகளைப் பேசித் தீர்த்துக் கொண்டு, ஒரே லட்சியத்தை நோக்கிப் பயணிக்கவும் முடிகிறது.

எதிரெதிர் நிலைகள் சந்திக்கும் சாம்பல் நிறப்பகுதியை கண்டு பிடிக்க முடிந்ததில், எனக்கேற்பட்டதைப் போலவே உங்களுக்கும் சந்தோஷம் உண்டாகியிருக்கும் என்றே நம்புகிறேன்."


நல்ல புத்தகங்களுக்குத் தனி இடம் இருக்கத் தான் செய்கிறது, இல்லையா?

எண்ணங்களை மேம்படுத்தினால், வாழ்க்கை உங்கள் வசமாகும்


வாழ்வில் முன்னேற துடிக்கின்ற, வெற்றிபெற, Energy இழந்த என அனைவருக்கும் பயன்படும் என்ற வகையில்,  இங்கே போதுமான வரை அந்நூலில் உள்ள தகவல்களை இணைத்துள்ளேன்…

அடிப்படை

முயற்சி திருவினையாக்கும், முயன்றால் முடியும், முயன்றால் “மட்டுமே” முடியும்.

- லேனா தமிழ்வாணன்

மனப்பாங்கு

நேற்மறை
எதிர்மறை
மனிதன் தனது மனநிலைகளை மாற்றிக் கொள்வதன் மூலம் தனது வாழ்க்கையை மாற்றி கொள்ளலாம் என்பதே எனது தலைமுறையின் மிகப்பெரிய கண்டுபிடிப்பகும்.

- வில்லியம் ஜேம்ஸ் (மன நல நிபுனர் – ஹார்வர்டு பல்கலைகழகம்)

நேற்மறை மனபாங்குள்ள மக்கள்: (முடடியும் முயற்சிப்போம்)

தன்னம்பிக்கை
விடா முயற்சி
அறிவுகூர்மை
சாதிக்க விரும்புவது
மாற்றத்தை வரவேற்பது
எதிர்மறை மனபாங்குள்ள மக்கள்: (முடியாது வீண்முயற்சி)

எல்லாம் என் நேரம்.
எல்லாம் என் தலைவிதி
அதெல்லாம் நமக்கு வேண்டாம்
இதெல்லாம் நமக்கு ஒத்து வராது.
இது போதும்.
நடப்பது நடக்கட்டும் போ!.
மாற்றம்:

ஒவ்வொரு மனிதனும் உலக்கத்தை மாற்ற வேண்டும் என்று நினைக்கிறார்கள். ஆனால் ஒருவர் கூட தங்களை மாற்றிக் கொள்ள வேண்டுமென நினைப்பது இல்லை. – லியோ டால்ஸ்டாய்.

மாற்றம் என்பது மானிட தத்துவம். மாறாதிருக்க நான் வனவிலங்கல்லன் – கவியரசு கண்ணதாசன்

நாம் மாற வேண்டும்
நாம் மாறியே ஆக வேண்டும்
நாம் கண்டிப்பாக மாறியே ஆக வேண்டும்
எண்ணங்களை மேம்படுத்துங்கள்:

வெள்ளத் தனைய மலர்நீட்டம் மாந்தர்தம்
உள்ளத் தனையது உயர்வு. – திருவள்ளுவர்.

உயர்வான எண்ணங்கள்
|
நேர்மறையான மனப்பாங்கு
|
நல்ல நடத்தை
|
சிறந்த செயல்பாடு
|
சரியான முன்னேற்றம்

தானே வகுத்த கட்டுப்பாட்டு நம்பிக்கையை தகர்தெரியுங்கள்:

தீதும் நன்றும் பிறர் தர வாரா
நோதலும் தனிதலும் அவற்றோறன்ன – புறநானூறு.

நான் அதிஷ்டம் இல்லாதவன்
நான் அவ்வளவாக படிக்காதவன்
எனக்கு புத்திசாலிதனம் போதாது
எனக்கு திறமை குறைவு
எனக்கு உதவி செய்ய யாருமே இல்லை.
எனக்கு போதுமான நேரமில்லை
எனக்கு யாரிடம் எப்படி பேச வேண்டுமென தெரியவில்லை.
எனக்கும் பொறுமைக்கும் ரொப்ம தூரம்.
என்னை யாரும் மதிப்பதில்லை.
உற்சாகமே உயர்வு :

உற்சாகம் இல்லாமல் பெரிய காரியங்களை யாரும் சாதிக்க முடியாது – எமர்சன்

சிலரிடம் காணப்படும் பதட்டம், படபடப்பு, ஆர்பாட்டம் ஆகியவற்றை சுறுசுறுப்பென்றோ, உற்சாகம் என்றோ நம்ப வேண்டாம்.
உண்மையான உற்சாகத்தில் பதட்டமோ, ஆர்பாட்டமோ, படபடப்போ இருக்காது.
பிறகு எப்படி உற்சாகமாக இருப்பது?

இரவில் ஆழ்ந்த உறக்கம் (7 மணி நேரம்)
சுறுசுறுப்பாக நாளைத் தொடங்குவது (படபடப்பு, பதட்டம் இல்லாமல்)
நேர்மறையான எண்ணங்களுடன் வேலையை செய்வது
நாள் முழுவதும் புத்துணர்ச்சியுடன் இருப்பது.
மகிழ்ச்சியுடன் அன்றைய வேலையை முடிப்பது.
தவறு:

தவறு செயவது மனித இயல்பு – பொதுமொழி

நாம் ஒரு தவறை செய்யும் போது,

அதை நியாயப்படுத்தக் கூடாது.
அதை மறைக்க கூடாது.
பிறரைக் குற்றம் சாட்டக் கூடாது.
அதை மீண்டும் செய்யக் கூடாது.
பிறகு என்னதான் செய்ய வேண்டும்,

ஒப்புக் கொள்ளுங்கள்
|
மன்னிப்புக் கோருங்கள்
|
கற்றுக் கொள்ளுங்கள்

முடிவெடுக்கும் திறன்:

தேனிக்கள் கொட்டும் என்று அஞ்சி கொண்டேயிருந்தால் என்றைக்கும் உங்கள் நாக்கால் தேனின் சுவையை உணரவே முடியாது. – பெயர் தெரியாத நபர்
எதர்க்கும் பிறரையே சார்ந்திருக்க ஊனமுற்றவர்கள்கூட விரும்புவதில்லை – சுகி சிவம்

முடிவெடுங்கள்:

தன்னம்பிக்கையுடன் (பயமின்றி)
திட நம்பிக்கையுடன் (சந்தேகமின்றி)
முழி நம்பிக்கையுடன் (தயக்கமின்றி)
முடிவுகள் :

சிக்கல் / சந்தர்ப்பம்
|
தீர்வுக்கான வழிகள் (1,2,3,4,5,6)
|
சிறந்த வழி
|
முடிவு
|
செயல்படுத்தல்
|
ஆய்வு

குறிக்கோள் – இலட்சியம் – இலக்கு:

இலக்கினை தெளிவாக முடிவு செய்ய வேண்டும்.
இலக்குகள் சாதிக்க கூடியதாக இருக்க வேண்டும்.
இலக்குகள் கால எல்லைக்குள் இருக்க வேண்டும்.
இலக்கினை அடைய முடியும் எனற நம்பிக்கை வேண்டும்.
நேர்மறை சிந்தனைகளை வளர்க்க வேண்டும்.
இதுதான் வேண்டும் என்பதை திட்டவட்டமாக தெளிபட நிர்ணயித்து செயல்பட வேண்டும்.
இலக்குகளை நிர்ணயித்தல்:

நீண்ட கால இலக்குகள் (5 ஆண்டுகளுக்குள்)
இடைப்பட்ட கால இலக்குகள் (3 ஆண்டுகளுக்குள்)
குறுகிய கால இலக்குகள் (1 ஆண்டுக்குள்)
1 ஆண்டு இலக்குகள், (குறுகிய கால இலக்குகள் நல்ல பலனை தரும்)

இந்த மாதம் (1-3 மாதம் வரை, 3-6 மாதம் வரை, 6-12 மாதம் வரை)
இந்த வாரம்
இந்த நாள்
இந்த நிமிடம்
நேர உணர்வு:

இன்றே உங்களால் செய்ய முடிந்ததை ஒருபோதும் நாளை வரை தள்ளிப் போடாதீர்கள் – பெஞ்ஜமின் ஃபிராங்க்ளின்

நிர்வாகத்தின் குறிக்கோளை தெளிவாக தெரிந்து கொள்ளுங்கள்.
தினசரி பணிகளை திட்டமிட்டு சரியான வரிசையில் செயல்படுத்தவும்.
சரியான நேரத்தில் வேலையை தொடங்கவும்.
தேவைக்கு அதிகமாக நேரம் எடுத்துக் கொள்ளக்கூடாது.
தேவையில்லா வேலைகளைத் தவிர்க்கவும்.
தள்ளிபோடும் மனப்பான்மையை அகற்றவும்.
மற்றவர்கள் நம் நேரத்தை வீணாக்க அனுமதிக்க கூடாது.
மற்றவர்களின் நேர விரயமும் நம்மால் தவிர்க்கப்பட வேண்டும்.
பேசும் கலை:

எந்த இடத்தில் எதை சொல்லவேண்டும் என்பதில் உள்ள தெளிவு
எந்த இடத்தில் எதை சொல்லக்கூடாது என்பதிலும் இருக்க வேண்டும். – சோம.வள்ளியப்பன்

தெளிவாக / புரியும்படி
சுறுக்கமாக
தேவைபடும் நேரங்களில் விளக்கமாக
தேவையான விஷயங்களை மட்டும்
தேவையான நேரத்தில்
சமையத்தில் உடணடியாக
வேறு சில சமயங்களில் கொஞ்சம் பொறுத்து
கவனமாக
சொற்களால் சுடாமல்
எனப் பல்வேறு சந்தர்பங்களில் பல்வேறு விதமாக நாம் பேச வேண்டும்.

கேட்கும் / கவனிக்கும் திறன்:

ஒரு திறந்த இதயத்தின் நம்பக்கூடிய
ஒரே அறிகுறி திறந்த காதேயாகும். – டேவிட் ஆக்ஸ்பர்கர்

கண், காது, மனம் இவை மூன்றும் ஒரு சேர கேட்கவும்.
சொற்களை கவனமாக கேட்கவும்.
பொறுமையுடன் கேட்கவும்.
கோபம் / உணர்ச்சிகளை வெளிப்படுத்தகூடாது.
இடைமறித்து பேசக்கூடாது.
இவர்தானே! இது என்ன பெரிய விஷயமா! இவர் என்னத்தை சொல்ல போகிறார்! என்கிற மெத்தனப் போக்கு / அலட்சியம் கூடாது.
சரியாக கேட்காமல் தவறாக புரிந்து கொண்டு பதில் அளிப்பதோ அல்லது வேலை செய்வதோ கூடாது.
தவிர்க்க வேண்டியவை:

மூடிய மனது
பொறாமை
சாக்கு போக்குகள்
அலுவலக அரசியல்
வம்பு பேசுவது
பிரச்சினைகளை பெரிதாக்குவது
மாற்றத்தை எதிர்ப்பது
குழம்பி இருப்பது
அறியாமை
சகாக்களின் கட்டாயத்திற்கு இணங்குவது.
நேற்று, இன்று, நாளை:

இன்றிருக்கும் நான் நேற்றிருந்த நான்-ஐ விட அறிவு, எண்ணம், படிப்பு, செயல், திறமை, பழக்கம்,… ஆகிய ஏதோ ஒன்றிலாவது, சிறிதளவாவது முன்னேறி இருக்க வேண்டும்.

நான் வேறு யாரோடும் போட்டியிடத்தேவையில்லை. நேற்றைய நானுடன் இன்றைய நான் போட்டியிட்டு முன்னேற வேண்டும். நாளைய நான் இன்றைய நானை விட ஒரு படியாவது மென்னேற வண்டும்.

November 6, 2013

குழந்தைகளின் மீதான அதிக எதிர்ப்பார்ப்பு...ஆபத்து!!?

குழந்தைகளின் மீதான அதிக எதிர்ப்பார்ப்பு ஆபத்தில் முடிந்துவிட கூடும்...! குழந்தைகளை தங்கள் விருப்பத்திற்காக  வளைக்கப் பார்க்கும் பெற்றோரை எண்ணி எழுதப்பட்ட பதிவு மட்டுமே !

பொம்மலாட்ட பொம்மைகளைப் போல இன்றைய குழந்தைகள் ஆட்டுவிக்கப்படுகிறார்கள் ! ஒரே குழந்தை அழகாய் ஆடணும், சுருதி பிசகாமல் பாடணும், விளையாடணும், நீச்சல் பழகணும், கராத்தே கத்துக்கணும்..... இவ்வளவும்  சிறப்பா பண்ணிட்டு படிப்பிலும்  முதல்ல வரணும் அப்படியே ஹிந்தி, ஆங்கிலம் சரளமா பேசணும் !!!??

என்ன கொடுமைங்க இது.  தங்களால் செய்ய முடியாததை தன் குழந்தையாவது செய்யவேண்டும் என்ற எண்ணம் சரி,  ஆனால் தாங்கள் அன்று அனுபவித்த சின்ன சின்ன சந்தோசங்களை  குழந்தைகளும் அனுபவிக்கணும்னு ஏன் யாருமே நினைக்கிறது இல்ல...??

போட்டிகள் நிறைந்த இன்றைய உலகின்  வேகத்திற்கு ஈடு கொடுக்க வேண்டுமே என்கிறார்கள். அதற்காக குழந்தைகளின் குழந்தைத்தனத்தை பணயம் வைக்கிறார்கள்.   அதன் வயதுக்கு ஏற்ற செயல்களை செய்யவிடாமல் அளவுக்கு அதிகமான அழுத்தம் கொடுத்து பெரிய மனிதர்களாக்காதீர்கள். அதன் விளைவை வெகு சீக்கிரம் நீங்கள் அனுபவிக்க நேரும் மிக கொடுமையாக...! வயதுக்கு மீறிய பேச்சுகள், செயல்கள் என்றுமே ஆபத்து ! என் குழந்தை எப்படி பேசுறா என்பது எல்லா நேரமும் சாதாரணமாக சொல்லி பெருமைப்படகூடிய விஷயம் அல்ல.

குழந்தை  குழந்தையாகவே...

தன்  போக்கில் விளையாடும் ஒரு குழந்தையை சிறிது நேரம் கவனித்துப் பாருங்கள்...அத்தனை ஆச்சர்யங்கள் அற்புதங்கள் அங்கே தெரியும் ! ஒவ்வொரு குழந்தையும் மதிப்பிடமுடியா பொக்கிஷங்கள் !! குழந்தை குழந்தையாக இருப்பது மட்டும்தான் அழகு, மாறாக ஒரு பொம்மை போல நடத்துவது மோசமான எதிர்விளைவுகளை ஏற்படுத்தும்.  . குழந்தை செய்வதை எல்லாம் திறமை என்ற பெயரை சூட்டி மறைமுகமாக ஒரு வன்முறைக்கு பழக்கப்படுத்திக் கொண்டிருக்கிறோம்.

மீடியாக்கள்  வேறு தன் பங்கிற்கு இந்த காரியத்தை கனகச்சிதமாக செய்கிறது

சமீபத்தில் ஒரு தெலுங்கு தொலைக்காட்சி நிகழ்ச்சியில் ஒரு 6 வயது குழந்தை ஆடிய ஆட்டம் எல்லோரையும் ஆரவார கூச்சலிட வைத்தது. முகநூலில் இந்த குழந்தையின் நடனத்தை ரசித்து பல ஆயிரம் ஷேர்ஸ், பலவித கமெண்ட்டுகள், அதிலும் ஒருவர் 'நீ நல்லா வருவே' என வாழ்த்த(?) எதில் நல்லா வர, குத்து பாட்டு நடிகையாகவா ? என்ன சொல்ல தெரியல. இந்த 'நல்லா வருவ' க்கு என்ன அர்த்தம்னும் புரியல.

பார்க்கும்  கண்ணை பொறுத்தது என்று எப்படி இதை ரசிப்பது. இன்றைய திரைப்படங்கள் நன்றாகவே நம் கண்ணையும் கருத்தையும் கெடுத்து வைத்திருக்கிறது. முகநூலில்  கருத்து சொன்னவர்களும் சிறு குழந்தை என்று எண்ணாமல் 'எப்படி இடுப்பை வளைக்குறா', கிறங்கடிக்குது கண்ணு, என்னமா கண் அடிக்கிறா என ஒவ்வொன்றாக வர்ணிக்கும் போது குழந்தையின் தாயால் அதை பாராட்டாக எண்ணி மகிழமுடிகிறது என்பது எனக்கு  ஆச்சர்யம் மட்டுமல்ல அதிர்ச்சி !
போனமாதம்  ஒரு விழாவிற்கு சென்றிருந்த இடத்தில் , 4 வயதிருக்கும் ஒரு பெண்குழந்தையை பார்த்து எனக்கு அருகில் இருந்த ஒரு  தோழி ,'செம கிளாமர் ' என கமென்ட் அடித்து சிரித்தார். காரணம் இது தான்,  இடுப்பு தெரியும்விதத்தில் அக்குழந்தை அணிந்திருந்த மாடர்ன் உடை. சிறு குழந்தையின் ஆடை அழகை ரசிக்கும் லட்சணம் இப்படி இருக்கு! அதுவும் ஒரு பெண்ணே இப்படினா... ஆண்கள் ?!!

சினிமா,  தொலைகாட்சி போன்றவற்றை  பார்த்து அதில் வருபவர்களை போல தனது குழந்தையும் இருக்கணும் என்பதை போன்ற போட்டி மனப்பான்மை ஒரு கட்டத்தில் அதீத பிடிவாதமாகி குழந்தையின் மீது அப்படியே திணிக்கப்படுகிறது. பெற்றோர்களின் விருப்பத்திற்கு குழந்தை ஒத்துழைக்காத போது கொடிய வார்த்தைகளால் அர்ச்சனை...இறுதியில் அடி !!?  

அதுவும் தவிர, இது போன்ற போட்டிகள், நிகழ்ச்சிகளினால்  கைத்தட்டு வாங்குவது தான் முக்கியம் என்பது  குழந்தையின் மனதில் ஆழமாக  பதிந்துவிடுகிறது...கிடைக்கும் கைத்தட்டுக்காக எவ்வளவு கஷ்டப்படவும் தயாராகிவிடுகிறார்கள். வளர வளர பிறர் நம்மை பாராட்டனும் என்பதை நோக்கித் தான் அதன் பயணம் இருக்கும். தன் சுயத்தை தொலைத்துவிட்டு அடுத்தவங்க புகழ, நல்ல(!) பெயர் எடுக்க என்று முயலுகிறது. இதில் ஏதோ ஒன்றில் தோல்வி என்றபோதில் தன்னையே காயப்படுத்திக் கொள்கிறது...சமயத்தில் தற்கொலை !

தேவையற்ற அதிக மன அழுத்தம்

நண்பர்  ஒருத்தர் சொன்னார், 'என் குழந்தை இப்பவே ஓஷோ புக்  படிக்கிறாள்' என்று... நம்மில் பலருக்கு புரிய கடினமான விஷயத்தை குழந்தையை  படிக்கவைக்க வேண்டியதன் அவசியம் என்னனு புரியல...?! ஒன்பது  வயது குழந்தைக்கு வேண்டிய புத்திமதிகளை பெற்றோர்கள் நீங்கள் சொல்லி வழிகாட்ட முடியாதா? யாரோ ஒருவர்  அன்று அவர் வாழ்ந்த சூழல், பெற்ற அனுபவங்களின் அடிப்படையில் எழுதப்பட்ட ஒன்று இன்றைய குழந்தைகளுக்கு எப்படி புரியும், எப்படி இன்றைய சூழலுக்கு சரியாக வரும்.  பெற்றோர்கள் நீங்கள் அதை படித்து அதில் குழந்தையின் வயதிற்கு  தேவையானதை மட்டும் அதன் மொழிக்கு ஏற்ற மாதிரி சொல்லி கொடுங்கள். அதை விட்டுவிட்டு ஒரு புத்தகத்தை கையில் கொடுத்து ' இதை படித்து தெளிவு படுத்திக்கொள், வாழ்வை தைரியமாக எதிர்கொள்'  என்பது சரியல்ல. சிறு குழந்தையின் மனதைக் கடினமாக்காதீர்கள் !

ஒவ்வொரு குழந்தையின் ரோல்மாடல் அவங்க பெற்றோர்கள் என்பதை பலர் மறந்துவிடுகிறார்கள். குழந்தைகளை  சிறந்தவர்களாக வடிவமைப்பது பெற்றோர்களின் கையில் தான் உள்ளது. விவேகானந்தர், பாரதி, காந்தி, ஓஷோ, புத்தர்,அரிச்சந்திரன் போன்றவர்களை முதலில் உங்களிடத்தில்  கண்டுக்கொள்ளட்டும்... கண்டு கற்றுக்கொள்ளட்டும்... உணரட்டும்...உங்களை மதிக்கட்டும் ! நாளை புத்தகத்தில் மகான்களை பற்றி படிக்கும் போது என் தந்தை என் தாயும் இவர்கள் வழி நடப்பவர்களே , இவர்களை போன்றவர்களே என பெருமைப்படட்டும். குறைந்தபட்சம் உங்கள் குழந்தைகள் முன் பொய் சொல்வதை தவிருங்கள் அது போதும்.

மாறாக,

மகான்களை பாடத்தில் படிக்க வைத்து பிள்ளைகளை சிறந்தவர்களாக்கி விடலாம் என்று மட்டும் எண்ணாதீர்கள். உங்களிடத்தில் காணமுடியாத  நல்லவைகள் வேறு இடத்தில் காணும் போது குழப்பம் தோன்றும், 'நாம மட்டும் ஏன் பின்பற்றணும்' என்ற கேள்வி எழும் ! உங்களிடத்தில் இல்லாத ஒன்றை வேறிடத்தில் காணும்போது உங்கள் மீதான மதிப்பின் சதவீதம் பற்றியும்  சற்று சிந்தியுங்கள் !!  அரிச்சந்திரன் கதையை கேட்டு பின்பற்றி நடந்தது என்பது அந்த காலம் ...இப்போதைய உலகம் வேறு...! விரல் நுனியில் உலகத்தை தொட்டுக் கொண்டிருக்கும் இவர்கள் நிறைய பேசுகிறார்கள், அதைவிட நிறைய யோசிக்கிறார்கள் !

எங்கையோ ஏதோ ஒரு குழந்தை திருக்குறளை மொத்தமாக ஒப்பிக்கிறது    என்பதற்காக உங்கள் குழந்தையையும் படுத்தி எடுக்காதீர்கள்.   ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு தனித் திறமை இருக்கும். அது எது என்று கண்டு அந்த வழியில் நடக்க விடுங்கள், வழிகாட்டுங்கள், வழிக்காட்டுவதுடன் நிறுத்திக்கொள்ளுங்கள்! மாறாக உங்கள் விருப்பதிற்காக குழந்தைகளை வளைக்க பார்க்காதீர்கள், ஒடிந்துவிடுவார்கள் !

பொருளாதாரத்தில்  உயர்ந்தவர்களாக, புகழ் பெற்றவர்களாக ஆகவேண்டும் என்று எண்ணி வளர்க்காமல் நல்ல மனிதர்களாக, அன்பு நிறைந்தவர்களாக, சமூக அக்கறை உள்ளவர்களாக வளருங்கள். அப்போதுதான் உங்களின் எதிர்காலம் நிம்மதியாக சந்தோசமாக கழியும்.

ஆரோக்கியமான சமூதாயம் நம் வீட்டில் இருந்துதான் ஆரம்பிக்கிறது என்பதை நினைவில் வைத்து நம் குழந்தைகளை அதன் இயல்பிலேயே வளர்த்து நம் நாட்டிற்கு நல்ல மகனை/மகளை கொடுப்போம். ஒரு சமூகம் சிறப்பாக கட்டமைக்கப்பட பெற்றோர்களின் பணி மிக முக்கியம் !

தயவுசெய்து குழந்தையை குழந்தையாக இருக்க விடுங்கள், வாழவிடுங்கள்...! உலகை தெரிந்துக் கொள்ள அதற்கு இன்னும் காலம் இருக்கிறது.. மூன்றே வருடத்தில் தென்னையை  வேண்டுமானால் காய்க்க வையுங்கள் குழந்தையை அல்ல !

குழந்தையின் வயதுக்கு  மீறி அதிகமாக திணிக்கும் போது அதை எதிர்கொள்ளமுடியாமல் சோர்ந்து  தன்னம்பிக்கையை  இழந்து விடுகிறது. சிறுவயதிலேயே பாராட்டுக்கு மயங்கும் குழந்தை அதே பாராட்டை வாழ்க்கையின் ஒவ்வொன்றிலும் எதிர்பார்க்கும் போது இந்த உலகின் வேகத்திற்கு ஈடுகொடுக்க முடியாமல்... எரிச்சல், கோபம் , இயலாமை,விரக்தி, சுயபச்சாதாபம்  போன்றவைகள் மனதை ஆக்ரமித்து கடுமையான மன அழுத்தத்தில் விழுந்து விடுகிறார்கள்.

தனது குழந்தைக்குள்  இவ்வாறு நிகழ்வது பெரும்பாலான பெற்றோருக்கே தெரிவதில்லை. தன்னால் முடியவில்லை என்ற நிலையில் தன் வயதை ஒத்த அல்லது தன்னை விட வயது குறைந்த ஒன்றின் மீது தன் கோபத்தை பதிய வைக்கிறது. அது பாலியல் ரீதியிலாக கூட இருக்கலாம் என்பதே ஜீரணிக்க முடியாத அதிர்ச்சியுடன் கூடிய உண்மை !?





ரிலாக்ஸ் பிளீஸ்...!

உற்சாகம் எதில் இருக்கிறது ?? என்று கேட்பதை விட அப்படினா என்ன என்று கேட்ககூடிய நிலையில் தான் இப்ப நம்ம நிலைமை இருக்குனு சட்னு சொல்லிடலாம்...?! வேலை,  விலைவாசி,கல்யாணம், குடும்பம்.  குழந்தை, படிப்பு.......இப்படி நாம புலம்பறதுக்கு நமக்கு நிறைய விஷயம் இருக்கு. பணம் பின்னாடி ஓடவே நேரம் சரியாக இருக்கிறது இந்த காலத்தில நான் உற்சாகம் அப்படின்னு சொன்னா கிலோ என்ன விலைன்னு தான் கேட்கவேண்டியது இருக்கிறது.

உற்சாகத்தை தேடி வேற எங்கும் போக வேண்டாம்...உங்களுக்குள்ளேயே இருக்கு அப்படின்னு பலரும் சொல்லி இருப்பாங்க நான் புதுசா ஒண்ணும் சொல்ல போறது இல்லை.  ஆனா அதையே அடிக்கடி கேட்டா கொஞ்சம் ட்ரை பண்ணித்  தான் பார்ப்போமே என்று தோன்றும் அல்லவா...?!

எழுத்தாளர் திரு. தி.ஜானகிராமன் அவர்கள் சொல்லி இருப்பார் "ஒருநாள்  பூராவும் உள்ளங்கை ரேகையையே பார்த்து ரசித்து கொண்டிருக்கலாம் என்று...!" நம்மிடமும், நம்மை சுற்றியும் பார்த்து வியப்பதற்கு எவ்வளவோ விசயங்கள் இருக்கின்றன. எங்கேயும், எப்போதும் அபூர்வங்கள் நம்மை சூழ்ந்து இருந்தும் நாமோ பூர்வமானவற்றை  பற்றி  யோசித்து, முந்தினவற்றையே  நினைத்து கவலைக் குழியில் விழுந்துக்கிடக்கிறோம்.

கண்ணுக்கு தெரியாத ஒன்றை பற்றி  கவலைபட்டே கண் முன் இருக்கும் அற்புதத்தை அனுபவிக்க தவறிவிடுகிறோம்.

உற்சாகமாக வைத்துகொள்வது அடுத்தவர் கையில் இல்லை, நிச்சயமாக நம்மிடையே தான் இருக்கிறது. ஆனால் இதை சொன்னால் கூட 'ஆமாம் எல்லாம் தனக்கு வந்தால் தான் தெரியும் தலைவலியும், காய்ச்சலும் என்று நீங்க நினைக்கலாம்' உண்மைதான் அவரவர் பிரச்சனை அவரவருக்கு பெரிசு தான். அதே சமயம் வலி தலையை பிளந்தாலும் காபி குடிக்கும் போது அதன் நறுமணத்தை நல்லா ஆழமாக, உள்ளிழுத்து, சுவாசித்து ரசித்து பார்க்கும் போது அந்த தலைவலியை கொஞ்சம் மறக்க முடியுமே.

ரசிக்க கற்று கொள்ளுங்கள்...வாழ்க்கையின் வலி பெரிதாக தெரியாது !!

முதலில் நம்மை நாமே ரசிக்க பழகிக்க வேண்டும். காலை எழுந்ததும், ஏண்டா விடியுதேனு புலம்பிட்டே எழுந்திருக்காம உங்களுக்கு குட் மார்னிங் சொல்ல வெளியில் சூரியன் காத்திட்டு இருக்கிற மாதிரி நினைச்சிட்டு உற்சாகமா எழுந்து வெளியே வந்து ஒளிவீசிட்டு இருக்கிற சூரியனை பார்த்து ஒரு ஹாய்,குட் மார்னிங் சொல்லிப் பாருங்க (பதில் gm , hi வரலைனா சாட் நினைப்புல u there  னு  எல்லாம் பழக்க தோசத்துல கேட்கபடாது...!! ) மழை காலத்தில சூரியன் வரலைனா என்ன பண்றதுன்னு புத்திசாலித்தனமா, நீங்க  கேட்டா 'மழைக்கு welcome சொல்லுங்களேன்' என்று சொல்வேன்.

உற்சாகத்தை பத்தியும் வாழ்க்கையை ரசிக்கணும், கடின படுத்திக்க கூடாதுன்னு நான் ஏன் சொல்றேன்னு தொடர்ந்து படிங்க புரியும்.

சொந்த அனுபவம்

எனக்கு ரோஜா செடி வளர்கிறது ரொம்ப பிடிக்கும், அதுவும் உலகத்தில் இருக்கிற அத்தனை கலர் ரோஜாக்களும் என் வீட்டில் இருக்கணும்  என்கிற சின்ன ஆசை நிறைய உண்டு...!! என் வீட்டில் இருக்கிற ரோஜா பூக்களிடம் நான் தினம் பேசி ஆகணும். (இல்லைனா பூ வாடி விடும்ங்க நம்புங்க...!) மாடி படில வரிசையா நிறைய தொட்டிகள் வச்சிருக்கிறேன், எல்லா செடியும்  ஒரு குட்டி மரம் போல இருக்கும்.  அதில் ரொம்ப அழகா இருக்கேன்னு காம்பௌண்டு சுவர்ல ஒரு நாலு தொட்டிய தூக்கி வச்சிருந்தேன். வைத்த நாளில் இருந்து சில பூக்கள் காணாம போயிட்டு இருந்தது. பூ நிறைய பூக்கிரதால ஒண்ணு இரண்டு தானே பறிச்சிட்டு போகட்டும்னு விட்டுட்டேன்.

காலையில் எழுந்ததும் எப்பவும் தொட்டிகளின் பக்கம் வந்து பூக்களை ரசித்துவிட்டு (பேசிட்டு...!) அப்புறம் தான் மத்த வேலை பார்பேன். வழக்கமா நேற்றும் எழுந்ததும் நேரா ரோஜாக்களிடம்  சென்றேன், அப்படியே மயக்கம் வராத குறைதான்  எனக்கு...?! சுவர் மேல இருந்த ஒரு தொட்டியை காணும்...எனக்கு வந்த பதட்டத்தில என்ன செய்றதுனே  தெரியல...கீழே விழுந்திருக்கும்னு வெளியில போய் பார்த்தேன்...அதை ஏன் கேட்கிறீங்க...இருந்த டென்ஷன்ல மொட்டை மாடில வேற போய் பார்த்தேன்...(தொட்டி எப்படி நடந்து படி ஏறி  மாடிக்கு போய் இருக்கும்னு கூட அப்ப யோசிக்க தோணல...?!!)

பக்கத்து வீட்டல இருக்கிறவங்க கிட்ட சரியா பேசினது கூட இல்லை. எனக்கு இருந்த வேகத்தில அவங்க கிட்டயும் போய் "ரோஜா  தொட்டியை யாரோ தூக்கிட்டு போய்ட்டாங்க, நீங்க பார்த்தீங்களா ?" கேட்க, அவங்களும் "அச்சச்சோ, அப்படியா ? நீங்க ஏங்க சுவர் மேல வச்சீங்க, நல்ல பெரிய ரோஜா பூவாச்சே, ரத்த கலர்ல செவாப்பா அழகா  இருக்குமே " அப்படின்னு எண்ணைய  கொஞ்சம் ஊத்திட்டு போனாங்க.

அந்த நேரம் ரோட்டில வாக்கிங் போறவங்க நான் புலம்பறதை ஒரு மாதிரி பார்த்திட்டு போனதை கூட சட்டை பண்ணாம இவங்கள்ல யாராவது தூக்கிட்டு போய் இருப்பாங்களான்னு  ஒரு டவுட்ல ஒவ்வொருத்தரா முறைச்சி பார்த்திட்டே  இருந்தேன்...! (எனக்கு ஒரு பெரிய சந்தேகம் என்னனா, அந்த தொட்டி சிமெண்டால  செய்தது. வெறும் தொட்டிய தூக்கவே இரண்டு ஆள் வேணும், செடியோட சேர்த்து அவ்வளவு பெரிய வெயிட்டை, ஆறடி உயர சுவர் மேல இருந்து எப்படி எடுத்திருப்பாங்க...! எத்தனை பேர் வந்திருப்பாங்க ......? எதில வச்சி கொண்டு போய் இருப்பாங்கனு, வேற சம்பந்தம் இல்லாம யோசிச்சிட்டு இருந்தேன்......

என் கூச்சல் கேட்டு மெதுவா...?!!வந்த என்னவர் அவர் பங்குக்கு ஏதோ சமாதானம் செய்தார்...என் மண்டைக்கு எதுவும் ஏறல...புலம்பறதையும் நிறுத்தல...அப்பதான் தூக்கத்தில் இருந்து எழுந்த என் பையன் பக்கத்தில வந்து, "ஏம்மா வருத்த படுறீங்க,  உங்களை விட அதிகமா ரோஜா செடியை  லவ் பண்றவங்க தான் இந்த மாதிரி  எடுத்திட்டு போய் இருப்பாங்க, அதை அவங்க நல்லா பார்த்துப்பாங்க, ப்ரீயா  இருங்க...டென்ஷன் படாதிங்க"னு ரொம்ப சாதாரணமா சொல்லிட்டு போய்ட்டான்...! நான் அப்படியே திக் பிரமை பிடிச்சி நின்னுட்டேன்.


என்ன ஒரு தெளிவு ! என்ன அழகான நேர்மையான எண்ணம் ! இது ஏன் எனக்கு  இல்லை?? அந்த நிமிஷம் , " எதையும் ரசனையோடு நேர்மையான எண்ணத்துடன் பார்த்தால் கடினமான நிகழ்வை கூட சாதாரணமாக எடுத்துகொள்ள கூடிய மன பக்குவம் வரும்... எந்த விசயமுமே நாம் எதிர் கொள்ற விதத்தில் தான் இருக்கிறது என்று பல தெளிவுகள் பிறந்தன என்னிடம்...?!"    

சக மனிதர்களையும் நேசிக்கணும் என்பதை சொல்லாமல் அறிவுறுத்தி சென்ற என் மகனை நினைத்து எனக்கு ரொம்ப சந்தோசமாக இருந்தது. அன்றைக்கு என் மகன் எனக்கு தகப்பன்சாமியாக தெரிந்தான்...!!

தேவை இல்லாமல் சின்ன விசயத்தையும் தலைக்கு கொண்டு போய் நாமும் டென்ஷனாகி நம்மை சுத்தி இருப்பவர்களையும் பதட்டப்படுத்தி விடுகிறோம்...இதை தவிர்த்தாலே உற்சாகம் நம்மிடம் ஓடி வந்து விடும். (ம்...அனுபவம் பேசுதுங்க...!!)




சாத்துக்குடி சாப்பிடுவதால் கிடைக்கும் பலன்கள்...!

நோயால் பாதிக்கப்பட்டு உடல் இளைத்தவர்கள் சாத்துக்குடியை சாற்றைப் பருகி வந்தால் உடலுக்கு புத்துணர்ச்சி உண்டாகும். உடலுக்கு வலு கொட...