November 7, 2019

சாத்துக்குடி சாப்பிடுவதால் கிடைக்கும் பலன்கள்...!




நோயால் பாதிக்கப்பட்டு உடல் இளைத்தவர்கள் சாத்துக்குடியை சாற்றைப் பருகி வந்தால் உடலுக்கு புத்துணர்ச்சி உண்டாகும். உடலுக்கு வலு கொடுக்கும். சாத்துகுடியானது இரத்தத்தில் எளிதில் கலப்பதால் உடல் வெகு விரைவில் தேறும்.
 
ஒவ்வொருவருடைய வளர்ச்சிக்கும் அவர்களுடைய நினைவாற்றலே முக்கிய பங்கு வகிக்கிறது. மறதி என்பது ஒருகொடிய நோய்க்கு ஒப்பாகும். எனவே  நினைவாற்றலை அதிகரிக்க சாத்துக்குடி பழம் சாப்பிடுவது நல்லது.
 
சிலர் எப்போதும் சோர்வாகவே இருப்பார்கள். சிறிது வேலை செய்தாலும், அதிகமாக அசதி உண்டாவதாகக் கூறுவார்கள். கை, கால் மூட்டுக்களில் வலி  உண்டாகும். சில சமயங்களில் தலைச் சுற்றலுடன் இலேசான மயக்கம் ஏற்படும். இவர்களுக்கு தினமும் இரண்டு சாத்துக்குடி வீதம் சாறு எடுத்துக் கொடுத்து  வந்தால் இரத்தம் விருத்தியாகும். உடல் அசதி நீங்கும்.
 
இரத்தத்தில் சிவப்பணுக்களின் எண்ணிக்கை குறைவதால் இரத்தச் சோகை ஏற்பட வாய்ப்புள்ளது. நமது நாட்டில் இரத்தச் சோகையால் 67 சதவிகிதம் பேர்  பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த இரத்தச் சோகையை விரட்டியடிக்க சாத்துக்குடி நல்ல மருந்தாகும்.

எலும்புகள் வலுவற்று காணப்படும். இதற்குக் காரணம் கால்சியச் சத்து குறைபாடே ஆகும். இவர்கள் சாத்துக்குடி கிடைக்கும் காலங்களில் அதிக அளவு சாப்பிட்டு  வந்தால் எலும்புகள் வலுவடையும்.
 
மலச்சிக்கல்தான் அனைத்து நோய்களுக்கும் மூலகாரணம் என்பதை நாம் பல இதழ்களில் அறிந்துள்ளோம். மலச்சிக்கல் ஏற்படாமல் இருக்க பழங்களே சிறந்த மருந்தாகிறது. மலச்சிக்கல் உள்ளவர்கள் தினமும் ஒரு பழம் வீதம் சாப்பிட்டு வந்தால் மலச்சிக்கல் தீரும்.
 
பசியில்லாமல் சிலர் அவதியுறுவார்கள். இவர்களின் வயிறு எப்போதும் நிரம்பி உள்ளது போல் தோன்றும். சாத்துக்குடி பழத்தை தினமும் உண்டு வந்தால் சீரண  சக்தியைத் தூண்டி நன்கு பசியை உண்டாக்கும்.
 
ஒரு வயதுக்குமேல் உள்ள குழந்தைகளுக்கு கால்சியச் சத்து அதிகம் தேவை. குழந்தைகளின் வளர்ச்சிக்கு இன்றியமையாதது இந்த கால்சியம் சத்துதான்.  சாத்துக்குடியில் அதிகளவு கால்சியச் சத்து இருப்பதால் குழந்தைகளுக்கு சாத்துக்குடி சாறு கொடுப்பது மிகவும் நல்லது.

தினமும் காலையில் ஒரு டம்ளர் மோர் குடிங்க..

மோர் என்பது பாலில் இருந்து பெறப்படும் நீர்மப் பொருட்களில் ஒன்று.இது கோடைக் காலத்திற்கு ஏற்ற, எந்தப் பக்க விளைவுகளும் தராத, அதிக நன்மைகள் உடலிற்கு வழங்குகின்றது
மோரில் வைட்டமின் ஏ, வைட்டமின் பி காம்ப்ளக்ஸ் போன்ற வைட்டமின்கள் வளமாக இருப்பதோடு, பொட்டாசியம், புரோட்டீன் போன்றவைகளும் உள்ளது.அந்தவகையில் தினமும் காலையில் ஒரு டம்ளர் மோர் குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள் என்னவென்று காண்போம்.

  • அளவுக்கு அதிகமாக உணவை உட்கொண்டிருந்தால், காலையில் ஒரு டம்ளர் மோர் குடியுங்கள். இதனால் உடலில் உள்ள கொழுப்புக்கள் வெளியேற்றப்படும். மேலும் மோர் செரிமானத்தை மேம்படுத்தும் மற்றும் புளிப்பான ஏப்பத்தைத் தடுக்கும்
  • ஒருவர் மோரை தினமும் குறைந்தது ஒரு முறை குடிப்பதால், நோயெதிர்ப்பு மண்டலம் வலுபெறும் மற்றும் ஆரோக்கியம் மேம்படும்.
  • மோரில் ஆன்டி-வைரல், ஆன்டி-கேன்சர் மற்றும் ஆன்டி-பாக்டீரியல் பண்புகள் உள்ளது. ஆகவே மோரை தினமும் குடித்தால், இரத்த அழுத்தம் குறையும் மற்றும் இதயம் ஆரோக்கியமாகவும் இருக்கும்
  • மோரில் உணவை ஆற்றலாக மாற்றும், செரிமானம் மற்றும் ஹார்மோன் உற்பத்திக்கு முக்கியமான ரிபோஃப்ளேவின் மற்றும் பி வைட்டமின்களும் அதிகம் உள்ளது.
  • மோரில் அத்தியாவசிய இதர பொருட்கள் மற்றும் இஞ்சி உள்ளது. இது அசிடிட்டியால் ஏற்படும் எரிச்சல் உணர்வைத் தடுக்கும். மேலும், மோர் அதிகப்படியான அமில சுரப்பால் வயிற்றில் ஏற்படும் எரிச்சலைக் குறைத்து, குளிர்ச்சியுடன் வைத்துக் கொள்ளும்.
  • ஒரு டம்ளர் மோரில் சிறிது இஞ்சி சேர்த்து குடித்தால், அஜீரண பிரச்னை நீங்கிவிடும். அதுவும் ஒருவர் காலையில் ஒரு டம்ளர் மோர் குடிப்பதால் நிச்சயம் நிறைய ஆரோக்கிய நன்மைகள் கிடைக்கும்.
  • உடல் வறட்சியை சரிசெய்ய சிறந்த வழி என்றால், அது மோர் குடிப்பது தான். மோரை ஒருவர் தினமும் குடித்தால், உடல் வறட்சி நீங்குவதோடு, உடலில் ஆற்றலும் அதிகரிக்கும்.
  • வயிற்றுப் போக்கால் கஷ்டப்படுபவர்கள், மோரில் இஞ்சி பொடி அல்லது நற்பதமான இஞ்சியை தட்டிப் போட்டு குடித்தால் குணமாகும். அதுவும் விரைவில் குணமாவதற்கு, ஒரு நாளைக்கு 3 முறை மோரைக் குடிக்க வேண்டும். இதனால் இரண்டே நாட்களில் வயிற்றுப்போக்கு பிரச்னை குணமாகிவிடும்.

November 6, 2019

பெண்கள் சீக்கிரம் கர்ப்பம் தரிக்க நினைத்தால்


கருப்பை என்பது பெண்ணின் உடலில் உள்ள ஒரு முக்கிய உறுப்பாகும்.
சத்தான உணவுகளை உண்ண வேண்டும்.ஏனெனில் நிலம் வளமாக இருந்தால்தான் விளைச்சல் நன்றாக இருக்கும். நம் வீட்டில் இருக்கும் ஆரோக்கியமான உணவுகளை எடுத்துக் கொண்டாலே போதும் சீக்கிரம் நீங்கள் தாய்மை அடையலாம்.

சீக்கிரம் கருவுற நினைப்பவர்கள் இந்த மாதிரியான உணவுகளை எடுத்துக் கொள்ளும் போது, அவர்களது கருப்பை நன்றாக பலப்படும். இதனால் கரு தங்குவது எளிதாகிறது 
  1. நாளொன்றுக்கு 8 டம்ளர் தண்ணீர் அருந்த வேண்டும்.
  2. பெண்கள் ஆரஞ்சு, காரட் உள்ளிட்டவைகளை அதிகம் எடுத்துக் கொள்ளவேண்டும் ஏனெனில் இது செக்ஸ் ஹார் மோனை புத்துணர்ச்சியுடன் வைத்திருக்க உதவும்.
  3. ஆண்கள் மீன் உணவுகள், வெள்ளைப்பூண்டு ஆகிய வற்றை அதிகம் உட்கொள்ள வேண்டும். இது விந்து வளர்ச்சிக்கு உதவும். 
  4. பெண்கள் காபி குடிப்ப தை தவிர்ப்பது கர்ப்பம் தரித்தலை 50 சத விகித வாய்ப்பை அதிகரிக்கிறது. 
  5. காய்கறிகளில் கால்சியம், பொட்டாசியம், மக்னீசியம் மற்றும் வைட்டமின்கள் போன்ற ஏராளமான ஊட்டச்சத்துக்கள் உள்ளன. எனவே நீங்கள் அதிகமான காய்கறிகளை எடுத்து வந்தால் கருப்பை நார்த்திசுக்கட்டிகளை விரட்டி விடலாம்.
  6. பச்சையிலை காய்கறிகளில் நிறைய போலிக் அமிலம், இரும்புச் சத்து போன்றவைகள் உள்ளன. அதே மாதிரி கருப்பையின் உள்ளடுக்குகள் நன்றாக வலிமையடையவும் உதவுகிறது. இரும்புச் சத்து கர்ப்ப பையின் ஷைச்கோட் இணைப்பிற்கு உதவுகிறது.
  7. பூசணிக்காய் விதைகளில் உள்ள அதிகளவு இரும்புச் சத்து சீக்கிரம் கர்ப்பமடைய உதவி புரிகிறது.
  8. பழங்களில் வைட்டமின் சி, பயோப்ளேவோனாய்டு போன்றவைகள் உள்ளன. இவைகளும் கருப்பை நார்த்திசுக்கட்டிகளை தடுக்கிறது. னவே பசிக்கும் போது பழங்களை எடுத்துக் கொள்ளுங்கள்.
  9. பால் பொருட்களான யோகார்ட், சீஸ், பால் மற்றும் வெண்ணெய் போன்றவற்றை எடுத்துக் கொள்ளுங்கள். இது உங்கள் கருப்பையை ஆரோக்கியமாக வைக்க உதவும்.
  10. பெண்கள் 8 வாரங்கள் தொடர்ந்து க்ரீன் டீ குடித்து வந்தால் கருப்பை நார்த்திசுக்கட்டிகளை குறைத்து விடலாம்.
  11. கானாங்கெளுத்தி மற்றும் சால்மன் போன்ற குளிர்ந்த நீரில் வாழும் மீன்களில் ஒமேகா 3 போன்ற கொழுப்பு அமிலங்கள் உள்ளன. இவை பெண் உடம்பில் உள்ள புரோஸ்டாக்லாண்டின் உற்பத்தியை குறைக்க உதவுகிறது
  12. ஒரு டம்ளர் வெதுவெதுப்பான நீரில் கொஞ்சம் எலுமிச்சை சாறு சேர்த்து குடியுங்கள். தினமும் காலையில் குடித்து வாருங்கள். இது உங்கள் கருப்பை ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது
  13. ஒரு நாளைக்கு 2-4 கப் கீரை டீ குடித்து வாருங்கள். அதே மாதிரி பச்சை காய்கறிகளையும் உங்கள் உணவில் சேர்த்துக் கொள்ளுங்கள். இதில் உங்கள் கருப்பையின் ஆரோக்கியத்திற்கு தேவையான போலிக் அமிலம் போன்றவை உள்ளதால் இவை உங்களுக்கு ஆரோக்கியமான குழந்தை வளர உதவி புரிகிறது.
  14. பாதாம் பருப்பு, ஆளி விதைகள் மற்றும் முந்திரி பருப்பு போன்றவற்றை எடுத்து சாப்பிடுங்கள். இதில் அதிகளவு ஓமேகா 3 கொழுப்பு அமிலங்கள் மற்றும் நல்ல கொலஸ்ட்ரால் இருக்கிறது. இந்த ஓமேகா 3 கொழுப்பு அமிலங்கள் கருப்பையில் புற்றுநோய் வராமல் தடுக்கிறது.
  15. விளக்கெண்ணெய் கருப்பை நார்த்திசுக்கட்டிகள் மற்றும் கருப்பை நீர்க் கட்டிகளை போக்க உதவுகிறது. இதிலுள்ள ரிகோனோலிக் அமிலம் உங்கள் நோயெதிப்பு சக்தியை வலுப்படுத்த உதவுகிறது. இது கருப்பை தொற்றுகளை போக்கும்.
  16. கர்ப்பம் தரிக்க உதவுவதில் கொண்டைக்கடலை மிக முக்கிய பங்கு வகிக்கிறது. ஏனெனில் இதில் உள்ள அதிகப்படியான புரோட்டீன் கர்ப்ப பை ஊட்டச்சத்திற்கு உதவுகிறது.
  17. தினமு ம் 40 நிமிட உடற்பயிற்சி அவசியம். இது தம்பதியரின் உடலில் உள்ள தேவைய ற்ற கொழுப்பை குறைத்து மன அழுத்த தை நீக்குகிறது. 
  18. மாதுளை கர்ப்ப பைக்கு செல்லும் இரத்த ஓட்டத்தை அதிகரித்து கருப்பை சுவர்களை வலுப்படுத்துகிறது. மேலும் குழந்தை வளர்ச்சிக்கு தேவையான ஊட்டச்சத்துக்கள் இதில் உள்ளன. அதே நேரத்தில் ஆண்களின் விந்தணுக்களின் தரத்தையும் மேம்படுத்தி எளிதில் கர்ப்பம் தரிக்க உதவுகிறது.
  19. வேக வைத்த உருளைக்கிழங்கை உங்கள் உணவில் சேர்த்து கொள்ளுங்கள். உருளைக்கிழங்கில் உள்ள விட்டமின் பி மற்றும் ஈ செல்பிரிதல் மற்றும் ஆரோக்கியமான கர்ப்ப பைக்கு பயன்படுகிறது.
  20. பன்னீரில் உள்ள புரோட்டீன் பெண்களின் இனப்பெருக்க மண்டலத்தை வலுப்படுத்துகிறது. 
  21. பிரக்கோலி கர்ப்பம் தரிக்க உதவும் சூப்பர் உணவாகும். இதிலுள்ள போலிக் அமிலம், இரும்புச் சத்து மற்றும் இதர ஊட்டச்சத்துக்கள் போன்றவை பெண்களின் கர்ப்ப பை ஆரோக்கியத்திற்கு உதவுகிறது. இதிலுள்ள விட்டமின் சி கருமுட்டை முதிர்ச்சி அடைந்து ஓவுலேசன் செயல் நடக்க பயன்படுகிறது.
  22. நல்ல காரசாரமான உணவுகளும் நீங்கள் தாய்மை அடைய பெரிதும் உதவுகிறது. பச்சை மிளகாய் இரத்த ஓட்டத்தை உடல் முழுவதும் அதிகரித்து இனப்பெருக்க மண்டல ஆரோக்கியத்திற்கு உதவுகிறது
  23. விட்டமின் பி6 அடங்கிய வாழைப்பழத்தை எடுத்து கொள்ளுங்கள். இது பெண்களின் மாதவிடாய் சுழற்சியை சரியாக்குவதோடு தாய்மை அடையவும் உறுதுணை புரிகிறது.
மேற்கண்ட உணவுகள் உங்கள் கருப்பையை ஆரோக்கியமாக வைக்க உதவுகிறது. எனவே உங்கள் உணவுப் பழக்கத்தில் இது போன்ற உணவுகளை சேர்த்து ஆரோக்கியமாக வாழ முற்படுங்கள்.

September 17, 2016

இலட்சங்கள் வேண்டாம் இலட்சியம் போதும்! சாதித்துவிடலாம்

நேர்முகம்
நேர்த்தியாகவும் வித்தியாசமாகவும் அனைவரும்     விரும்பும்படியும் செய்யும் தொழிலை மேற் கொண்டவர்கள் மற்ற எல்லாரைக் காட்டிலும் உயர்ந்தே நின்றிருக்கிறார்கள் என்பதற்கு உதாரணமாக திகழக் கூடியவர் இவர்…
தென்னிந்தியாவின் மான்செஸ்டர் என்றழைக்கப்படும் கோவையில் நூற்பாலைகள் 24 மணி நேரமும் இடைவிடாமல் இயங்கிக் கொண்டிருந்த கால கட்டத்தில் எண்ணற்றோரின் களைப்பை 24 மணி நேரமும் நீக்கிய பெருமைக்கு சொந்தக்காரர் இவர்…
வழிப்பயணயத்தில் இருப்பவர்கள் மட்டுமே வந்தமர்ந்து தேநீர் அருந்துவார்கள் என்பதனை வீட்டில் உள்ளவர் களையும் ஆசை கொண்டு நேநீர் அருந்த வைத்த ஆற்றலுக்குரியவர் இவர்…
நம் பொருளை பிறர் சுவைக்கும் பொழுது கொடுக்கும் பணத்திற்கு இது தகும். தரம் சுகாதாரம் இருக்கிறது என மனம் மகிழ்ந்து பாராட்ட வேண்டும் என்பதில் தனிக்கவனம் செலுத்தி கோவை பேக்கரி உலகின் தலைவராக இருக்கக்கூடியவர் இவர்…
கடினமானது, இதெல்லாம் முடியாது என்கிற எண்ணமெல்லாம் கூடாது. உழைப்பை முறையாகக் கொடுத்தால் இங்கு எதுவும் சாத்தியப்படக்கூடியதுதான் என ஒவ்வொருவரின் வாழ்விலும் நம்பிக்கை ஊட்டி வருபவர்…
செய்யும் தொழிலில் இதுதான் எல்லை என்று இருந்து விடாமல் அடுத்தடுத்து நம் ஆற்றலை வெளிக் கொணர்ந்து வளர்ந்து கொண்டே இருக்க வேண்டும். அதே சமயம் நம்மால் முடிந்தளவு நாம் வாழும் சமுதாயத்திற்கு சேவைகள் புரிதலும் வேண்டும் என்கிற கொள்கையை சந்திப்பவர்களிடம் தவறாமல் கூறி உற்சாகப்படுத்தி வருபவர்…
தந்தையின் உழைப்பு, தாயின் அரவணைப்பு, உடன் பிறந்தோர் குடும்பத்தினரின் ஒத்துழைப்பு, தனக்கென அமைந்த அலுவலர்கள், தொழிலாளர்களின் தொழில் ஈடுபாடு ஆகியவற்றால் “அரோமா” மக்கள் மத்தியில் சென்று சேர்ந்திருக்கிறது. நாளும் மக்களோடு நாங்கள் இணைந்தே இருக்க வேண்டும் என்பதே என் தொழில் ஆசை என்ற “அரோமா” திரு.பொன்னுசாமி அவர்களை ஆசிரியர் டாக்டர் க. கலைச்செல்வி மற்றும் பல்லவி ராஜா என்கிற கிருஷ்ண பிரசாத் அவர்களுடன் நாம் சந்தித்தோம். இனி அவரோடு நாம்….

உங்கள் இளமைக்காலம்…

கோவை பேரூரை அடுத்துள்ள காளம் பாளையம் என்னும் ஊரில் விவசாயத்தின் மீது அதிக ஈடுபாடு கொண்ட குடும்பத்தில் பிறந்தேன். அப்பா ரங்கசாமி கவுண்டர், அம்மா கண்ணம் மாள். ஒரு அண்ணன் இரண்டு தம்பிகள். நான்கு பேருமே ஆரம்பக் கல்வியை காளம்பாளையத் திலும் உயர்நிலைக் கல்வியை 10 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள தொண்டாமுத்தூர் உயர் நிலைப் பள்ளியிலும் படித்தோம்.
அப்பா விவசாயத்துடன் பால் வியாபார மும் செய்து வந்தார். தோட்டம் தோட்டமாக சுற்றியுள்ள ஊர்களுக்குச் சென்று, பால் கறந்து அப்பாலைக் கோவைக்கு கொண்டு வந்து கடை கடையாக வீடு வீடாக விற்பனை செய்து நாள்தோறும் குறைந்த பட்சம் 30 கிலோ மீட்டர் தூரம் சைக்கிள் ஓட்டியபடி வியாபாரம் செய்து வந்தார். பால் வியாபாரத்தில் சிரமம் அதிகம் இருந்தது. ஒரு கட்டத்தில் இனி விவசாயத்தை மட்டுமே கவனிக்க முடியும் என்றுணர்ந்த அப்பா பால் வியாபாரத்தை வேறு ஒருவர் ஏற்றுச் செய்தால் நல்லது என்றார். அப்போது நான் 11ஆம் வகுப்பு படித்துக் கொண்டிருந்தேன். கொஞ்சம் கூட யோசிக்காமல் உடனே அப்பா விடம் நான் செய்கிறேன் என்றேன். என் படிப்பு பாதிக்கும் என்று கருதி ஒத்துக் கொள்ள மறுத்தார். விடாப்பிடியாக அப்பாவிடம்
பேசி சம்மதம் வாங்கி பால் வியாபாரத்தை துவக்கினேன். அப்போது எனக்கு வயது 16.
கடின வேலையான பால் வியாபாரத்தை 16 வயதில் நீங்கள் ஏற்றுக் கொண்ட போது உங்கள் உடலின் ஒத்துழைப்பும் உள்ளத்தின் ஈடுபாடும் உங்களுக்குள் எந்தளவு இருந்தது?
16வது வயதில் ஒரு  பொறுப்பை ஏற்றுச் செய்யப்போகிறோம் என்கிற மகிழ்ச்சியைத் தவிர வேறு எண்ணம் எனக்குள் எழவே இல்லை. களைப்பு, சோர்வு என்பதெல்லாம் எனக்குள் இல்லவே இல்லை. என்னுடைய முழு சிந்தனையும் செயலும் அதன் மீதே இருந்தது. அதிகாலை 2 மணிக்கு எழுந்து சைக்கிளில் தோட்டம் தோட்டமாக சென்று பாலைக் கறந்து அதனை 5.30 மணிக்குள் கோவைக்கு கொண்டு வந்து விற்பனை செய்து விட்டு வீடு திரும்பும் போது மணி 11 ஆகி யிருக்கும். காலை உணவை எடுத்துக் கொண்டு சிறிது நேரம் ஓய்வுக்குப் பிறகு மீண்டும் 2 மணிக்கு அதே போல் பாலைக் கறந்து மாலைக்குள் விற்பனை செய்து விட்டு வீடு போகும்போது இரவு 8 ஆகியிருக்கும். 6 மணிநேரம் மட்டுமே தூக்கம். பல வருடங்கள் இதுபோன்ற அயராத உழைப்பைக் கொடுத்ததின் பலன் தான் இன்றைய ‘அரோமா பேக்கரி’, ‘அரோமா பால்’ போன்றவை எல்லாம்.
‘அரோமா பேக்கரி’ எண்ணம் எப்போது? எப்படி? உதயமானது?
பால் வியாபாரத்தில் என் கடினமாக உழைப்பை சளைக்காமல் தந்த வண்ணம் இருந் தேன். அப்போது கோவை நகரில் அங்கங்கே சாலைகளில் ஒன்றிரண்டு டீக்கடைகள் இருக்கும். அந்த டீக்கடைகளில் பேக்கரி பொருட்களான கேக், பிஸ்கட், பன், ரொட்டி வகைகள் எல்லாம் இருக்காது. பால் வியாபாரத்தின் தொடர்ச்சியாக தரமான பேக்கரி பொருட்களுடன் டீயும் சேர்த்து தரும் வகையில் பேக்கரி கடைகள் அமைத்தால் நன்றாக வியாபாரம் நடக்கும் என்று நம்பினேன். முதன் முதலாக கோவை வைசியாள் வீதியில் 1972ம் ஆண்டு ‘மகாலட்சுமி பேக்கரி’ என்ற பெயரில் கடையைத் துவக்கினேன். முதன் முதலில் கோவையில் உள் அலங்கார அமைப்புடன் (Interior Decoration) பேக்கரியைத் துவக்கிய பெருமை எங்களையே சாரும். 1974ல் ஆர்.எஸ்.புரம் பகுதியில் ‘அரோமா’ என்கிற பெயரில் துவக்கினேன். அதற்கு பின்பு 6 மாதத்திற்கு ஒரு கடை என தொடர்ந்து கோவையைச் சுற்றி 25 பேக்கரிகளை உருவாக்கி மக்கள் ஆதரவுடன் நன்கு நடத்தி வருகிறோம்.
‘அரோமா’ என்கிற பெயரைத் தாங்கள் தேர்ந்தெடுக்கக் காரணம்?
‘அரோமா’ என்றால் நறுமணம் என்று பொருள். எங்கள் பேக்கரியில் கிடைக்கும் அனைத்து பொருட்களும் நறுமணத்துடன் தரமாக கிடைக்கும் என்பதனை எடுத்துக் காட்டவே ‘அரோமா’ என்கிற பெயரை தேர்வு செய்தோம். அதற்கேற்பவே இன்றளவும் பொருட்களைத் தந்து வருகிறோம்.
‘அரோமா பால்’ உருவான விதம்
அன்றாடம் பாலுக்காக மக்கள் நீண்ட வரிசையில் நிற்பதை கவனித்தேன். பால் வியாபாரம் செய்து வரும் நாமே நுகர்வோருக்கு அருமையான பாலை கைபடாமல் மிகவும் சுகாதார முறையில் தரவேண்டும் என்று எண்ணினேன். அதற்கான செயலில் இறங்கி 1995ல் பாக்கெட் பால் விற்பனையை அறிமுகப் படுத்தினேன். பாலின் பெயரும் ‘அரோமா’ என்றே அமைந்தது. அன்று தொடங்கி இன்று வரை பாலை நுகர்வோருக்கு வேண்டிய, தேவைப்படும் அளவுகளில் பாக்கெட் செய்து தருகிறோம். பால் ‘டோன்டு மில்க்’ ‘ஸ்டேன்டைடைஸ்டு மில்க்’, ‘டபுள் டோன்டு மில்க்’, ‘புல் கிரிப் மில்க்’ என்று விதம் விதமாக மார்க்கெட் செய்து வருகிறோம்.
உங்கள் எதிர்கால லட்சியம்….
சாதாரணமாக தொடங்கிய தொழில்கள் இன்று தமிழ்நாடு, கேரளா என்று விரிந்து பரவியுள்ளது. ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஊழியர்கள் நேரடியாகவும், மறைமுகமாகவும் வேலை செய்கிறார்கள். மேலும் பாலின் தொடர்ச்சியாக அதன் ‘By Products’ மற்றும் ‘ரெடி-டு-ஈட்’ எனப்படும் உணவு வகைகளையும் செய்யும் எண்ணம் உள்ளது.
“அடுத்த 5 ஆண்டுகளில் நீ எங்கு இருக்க வேண்டும் என்று நிர்ணயித்து கொண்டு அதில் நீ முழு மூச்சாக இறங்கு” என்பது என் கொள்கை. அப்படி செய்யும் போது அங்கு வெற்றி மட்டுமே கிட்டும் என்று உறுதியாக நம்புகிறேன்.
உங்கள் நிறுவனத்தின் வெற்றிக்கு காரணமாகக் கூற விரும்புவது….
எங்கள் நிறுவனத்தின் எந்த வகையான உணவுப்பொருள் என்றாலும் அதன் மூலப் பொருளில் இருந்து பயன்படுத்தப்படும் கரண்டி வரை தரமான, சிறந்த, சுத்தமான  பொருட் களையே பயன்படுத்தி வருவது,

வாடிக்கையாளர்களின் ‘மனம் கனிந்த பாராட்டே எங்கள் விருதுகள்’ என்கிற எண்ணத்தோடு ஒவ்வொருவரும் வேலை செய்வது,
எங்கள் நிறுவன பொருட்களை வாங்கும் வாடிக்கையாளர்கள் நாம் வாங்கும் பொருளுக்கு தகுந்த விலைதான் என்று கூறும் வகையில் சரியான விலையில் மட்டுமே பொருட்களைத் தருவது இவைகளே எங்கள் நிறுவனத்தின் வெற்றிக்கான காரணங்களாகும்.
உங்கள் குடும்பம் குறித்து….
எனது வாழ்க்கைத் துணைவி சுப்புலட்சுமி. இரண்டு மகள்கள். விஜயலட்சுமி விஜயவேல், விமலாதேவி கண்ணன் இருவரும் MBA படித்து முடித்து என்னுடன் இணைந்து நிர்வாகத்தை கவனித்து வருகிறார்கள்.
இருவருக்கும் திருமணம் முடிந்து விட்டது. விஜயவேல் விஜயலட்சுமி அவர்கள் அன்னூரில் முத்தூர் முருகன் நூற்பாலை இயக்குநராகவும், கண்ணன் விமலாதேவி அவர்கள் ஈரோட்டில் பிருந்தாவன உணவக இயக்குநராகவும் இருந்து வருகிறார்கள்.
உங்களால் மறக்க முடியாத இனிய நிகழ்வு…
கொடிசியா வளாகத்தில் நடந்த பள்ளி குழந்தைகளுக்கான விழாவில் ஒரே நேரத்தில் 60000 குழந்தைகளுக்கு உணவு வழங்கி ‘Limca Book Guinness’ல் இடம் பெற்றது.

தொழிலில் சந்தித்த இடர்ப்பாடுகள்….

சரியான திட்டமிடலும், ஆர்வமும் அதிகம் இருந்தாலே தொழிலில் இடர்ப்பாடுகள் என்பது எழாது.
மாற்றுத் தொழிலில் ஈடுபடும் எண்ணம் உண்டா?
இல்லை. உணவுத் தொழில் சார்ந்தே இன்னும் நிறைய செய்ய வேண்டும் என்று நினைக்கிறேன். மக்களோடு இணைந்திருந்து செய்யும் இத்தொழிலில் பொய் சொல்லி மக்களை ஏமாற்ற முடியாது என்பதனால் ஒரு நேர்மையான தொழிலை புண்ணியம் சேர்க்கும் தொழிலை எல்லோரைக் காட்டிலும் சிறப்பாகச் செய்ய வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கிறேன்.
தொழில் நிறுவனங்கள் தற்போது பணியாளர்களைத் தக்க வைக்க முடியாமைக்குக் காரணம்….
நேரடித் தொடர்பு இல்லாமை, பெருகி வரும் தொழிற்சாலைகளால் உருவாகும் வேலை வாய்ப்புகள் காரணமாகலாம்.
இளைஞர்களுக்கு நீங்கள் சொல்ல விரும்புவது…
உடனடியாக சாதித்து விட வேண்டும் என்கிற ஆசையை தவிர்த்து விட்டு செய்யும் தொழிலில் அதிக ஈடுபாடும் உழைப்பும் கொடுக்கத் தயார் என்றால் எல்லோராலும் வெற்றி பெற முடியும்.
மேலும் இலட்சங்கள் இல்லையே என்று கவலைப்பட்டுக் கொண்டிருக் காமல் இலட்சியங் களை வகுத்துக்கொண்டு இடைவிடாது செயல்புரிந்தால் சாதித்து விடலாம்.
தன்னம்பிக்கை குறித்து உங்கள் கருத்து….
உழைப்பால் உயர்ந்தவர்களை நாடறியச் செய்து அவர்களின் வாழ்க்கை சம்பவங்கள் மூலம் வளரும் தலைமுறையினருக்கு சோதனை களை தகர்த்துவிட்டு சாதிக்கும் எண்ணத்தை தூண்டி வருகிறது.
தனிமனித வாழ்வு சிறக்க பலவகையிலும் உதவி வருகிறது.
கோவை மாவட்ட பேக்கரி சங்கத் தலைவர் என்ற முறையில் சங்கத்தின் மூலமாக இளைஞர்களுக்கு தாங்கள் செய்ய விரும்புவது?
பேக்கரி தயாரிப்புகள் குறித்த பயிற்சி வகுப்புகளை சங்கத்தின் மூலமாக நடத்தி இளைஞர்களுக்கு வேலை வாய்ப்புகளை உருவாக்கித் தர வேண்டும் என விரும்புகிறேன்.
விரைவில் இதனை செயல்பாட்டுக்குக் கொண்டு வர இருக்கிறோம்.

மேலும் தொழிலில் ஈடுபட்டுள்ளவர் களுக்கு ஆலோசனை தரும் விதமாக கோச்சிங் சென்டர் ஒன்றும்  அமைக்கவுள்ளோம்.

நிஜ உலகின் நிழல் மனிதர்கள்

அது ஒரு தேநீரகம் கையில் பைபிளும், கண்களில் அமைதியும் கொண்டு சாந்தமாய்     உள்ளே நுழைந்தார் இளமாறன். மின்விசிறியின் கீழிருந்த நாற்காலியில் அமர்ந்தார். பைபிள் புத்தகத்தை திறந்து மனதால் படிக்கலானார். அப்போது அவர் முன் துறுதுறுவென்ற வாலிபன் ஒருவன் வந்து, “சார்! என்ன சாப்பிடுறீங்க சார்?” கேட்டான். அவன் சொன்னது காதில் வாங்காமல் பைபிளை படித்து கொண்டிருந்தார் இளமாறன்.
‘நாம் சொன்னது அவர் காதுல விழல போலிருக்கு…’ என்று எண்ணிக் கொண்டு கொஞ்சம் குரல் உயர்த்தி, “சார்! என்ன சாப்பிடுறீங்க சார்? என்று கேட்டான். சட்டென்று விழிப்பிற்கு வந்தார் இளமாறன். புத்தகத்தை மூடிவிட்டு, “Praise The Lord!” என்றபடி அந்த வாலிபனை பார்த்தார். “சார்!” என்று மறுபடியும் கேள்வி எழுப்ப வாயை திறந்தான் அந்த வாலிபன். “தம்பி! ஒரு டீ! ஒரு காலி கப்!” என்றார் இளமாறன் அதிகாரமாக. “சரி சார்!” என்று அந்த வாலிபனும் உள்ளே சென்றான். மீண்டும் பைபிளினுள் மூழ்கினார் இளமாறன்.
தேநீருடன் வந்தான் அந்த வாலிபன். “சார்!” என்றபடி மரியாதையுடன் தேநீர் மற்றும் ஒரு கோப்பை உடன் வைத்துவிட்டு உள்ளே சென்றான். தேநீர் அருந்திய ஒரு சில நிமிடங்களில், இளமாறன், “தம்பி!” என்று உரக்க குரலில் அலறினார். தேநீரகத்திலுள்ள கண்கள் அனைத்தும் இளமாறனை தான் பார்த்தது. சத்தம் கேட்டு ஓடி வந்தான் அந்த வாலிபன்.  “சார்!” என்றபடி வந்து நின்றான். “என்னப்பா தம்பி! டீ கேட்டா இவ்வளவு சூடா கொடுத்திருக்க? மனுஷன் எப்பிடிப்பா குடிக்கிறது? போ! இத நல்லா சூடாத்தி கொண்டு வா …” என்று திருப்பி அனுப்பினார் இளமாறன். மீண்டும் பைபிளினுள் நுழைந்தார்.
சில விநாடிகளில் தேநீர் வந்தது. ஒருவாய் குடித்துவிட்டு மீண்டும், “என்னப்பா தம்பி! இதுல சர்க்கரை எதுவும் போடலயா? மாட்டுக்கு ஊத்தற தண்ணி மாதிரி இருக்கு…” என்று உரக்க கூறினார் இளமாறன். ஒன்றும் புரியாதவன் போல் நின்றிருந்தான் அவ்வாலிபன். “ஏனப்பா! புரியலையா… நீ நம்புல இல்லை! நீயே குடிச்சுப்பாரு! இதென்ன டீயா இது? வாயில வெக்கிற மாதிரியா இருக்கு?” என்று மேலும் பொறிந்து தள்ளினார். “போ! போய்… சர்க்கரை போட்டு நல்லா… தித்திப்பா… கொண்டு வா! போ!” என்றார். சுற்றியிருந்தவர்கள் அந்த வாலிபனின் முகத்திலிருந்த படபடப்பு கண்டு அனுதாபப்பட்டனர். அவனை இப்படி திட்டிய அந்த முகத்தை பார்க்க முனைந்தனர் அங்கிருந்த சிலர். அந்த முகம் பைபிள் புத்தகத்தை மும்முரமாக படித்து கொண்டிருந்தது.
சர்க்கரையிட்ட தேநீர் இளமாறன் நாவில் தித்திப்பு புலர்த்தியது. தேநீர் அருந்திவிட்டு தன் வாயை கழுவி அதே கோப்பையில் உமிழ போனார் இளமாறன். “சார்! கை கழுவுற இடம் அங்க இருக்கு சார்! என்று பணிவாக சொன்னான் அந்த வாலிபன். அந்த கோப்பையிலேயே உமிழ்ந்துவிட்டு, அந்த வாலிபனை கூர்மையான கண்களால் முறைத்தார். அவனோ தலை குனிந்து போனான். பின் பைபிள் புத்தகத்தை பத்திரமாக எடுத்து துடைத்து தன் பையினுள் வைத்துவிட்டு கிளம்பினார். அப்போது அவரின் கைபேசி அலரியது.
அதை எடுத்து இளமாறன், “ஆ… சொல்லுங்க சார்! நல்லாயிருக்கேன் சார்… சொல்லுங்க! உங்க கம்பெனியில் Human Values பத்தி கருத்தரங்கா… பேஷா கலந்துக்கிறேன்! ஆமா சார்! இந்த உலகத்துல கடைசி கடைசியா என்ன சார் மிஞ்சியிருக்க போகுது … ஒவ்வொரு மனுஷனோட அன்பும் அக்கறையும் தான் … அதுதானே Human Values 3 அடிப்படையே… நான் வந்துருவேன் சார்! கண்டிப்பா…” என்று பேசியபடியே தேநீரகம் விட்டு வெளியேறினார். இளமாறன் உமிழ்ந்த கோப்பையெடுத்து அந்த இடத்தை சுத்தப்படுத்தி கொண்டிருந்தான் அந்த வாலிபன்.

தோற்றுப் பார்

வெற்றி எனும் முகவரியை அடையப் பயன்படும் பாதையின் பெயர் தோல்வி. தோல்வி நம் வாழ்க்கையின் ஒரு அங்கம். இந்த உலகத்தில் தோல்வியை சந்திக்காதவர் எவரும் இல்லை. தோல்வி ஒவ்வொரு முறையும் ஒரு பாடத்தை நமக்கு கற்றுத் தருகிறது. நாம் செய்யும் எந்த ஒரு விஷயத்திலும் முழு வெற்றி பெற வேண்டு மானால் தோல்வியை நாம் சந்தித்தே தீர வேண்டும். தோல்வி ஒரு வாழ்க்கை நியதி. தோல்வியையே சந்திக்காமல் நான் சாதித்தேன் என்று எவராவது சொன்னால் அது உலகின் எட்டாவது அதிசயமாகும்.

வாழ்க்கையில் சாதித்த எந்த ஒரு மனிதனையும் கேட்டுப் பாருங்கள். ஒரு வெற்றியைப் பெறஅவர் சந்தித்த தோல்விகள் ஏராளமாக இருக்கும். பட்ட அவமானங்களோ அதைவிட அதிகமாக இருக்கும். வெற்றி என்றால் என்ன என்பதை உங்களுக்குப் புரிய வைக்க உதவும் ஒரு கருவியே தோல்வி.

உங்களுக்கு மிகவும் பிடித்தமாக பத்து சாதனையாளர்களின் பெயர்களை ஒரு வெள்ளைத்தாளில் எழுதிக் கொள்ளுங்கள். அவர்களுடைய வாழ்க்கை வரலாறு புத்தகங் களை எடுத்து ஒவ்வொருவருடைய வாழ்க்கை யையும் கூர்ந்து படித்துப் பாருங்கள். அவர்கள் ஒவ்வொருவரும் எத்தனை முறை தோற்றிருக் கிறார்கள் என்பதை பட்டியலிடுங்கள். வாழ்க்கை யில் தோற்காமல் சாதனை படைத்தவர் இந்த உலகத்தில் எவரும் இல்லை என்பது இப்போது உங்களுக்குப் புரியும்.

தோல்விகளைக் கண்டு பயந்து ஓடுபவர் களை தோல்வியானது தொடர்ந்து துரத்திச் சென்று அழித்துவிடும். தோல்விகளை துச்ச மென நினைத்து அதை எதிர்த்துப் போராடுபவன் எவனோ அவன் நிச்சயம் வாழ்க்கையில் ஜெயிக்கிறான். ஸ்காட்லாந்து தேசத்தின் மன்னன் இராபர்ட் புரூஸ். ஸ்காட்லாந்து நாட்டிற்கும் இங்கிலாந்து நாட்டிற்கும் இடையே கருத்து வேறுபாடு இருந்தது. இதனால் இரண்டு நாடுகளுக்கும் அடிக்கடி போர் நடைபெற்றது. இதில் பலமுறைஇராபர்ட் புரூஸிற்கு தோல்வியே பரிசாகக் கிடைத்தது. இதனால் இராபர்ட் புருஸின் ஆட்சி நிரந்தரத்தன்மை இல்லாமல் இருந்தது. மேலும் அந்நாட்டில் ஜான் பாலியால் என்பவன் இராபர்ட் புரூஸிற்கு எதிராக செயல்பட்டுக் கொண்டிருந்தான். இராபர்ட் புரூஸை அழித்து தானே மன்னர் பதவியில் அமர வேண்டும் என்று அவன் துடித்துக் கொண்டிருந்தான். இங்கிலாந்து மன்னரான எட்வர்டு இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி இருவருக்கும் சமசரம் செய்து வைக்கிறேன் என்று இடையில் புகுந்தார். ஆனால் தான் நினைத்தபடியே இரண்டு பேரையும் சமரசம் செய்யாமல் அவர்களையும் ஸ்காட்லாந்து தேசத்தையும் மிகக் கேவலமாகப் பேசினான்.

எட்வர்டு மன்னரின் இத்தகைய கேவல மான பேச்சைக் கேட்க இராபர்ட் புரூஸ் ஆத்திர மடைந்தான். எனவே மீண்டும் ஒரு முறை இங்கிலாந்தை எதிர்த்துப் போரிடுவது என்று முடிவு செய்து போர் தொடுத்தான். இம்முறையும் புரூஸிற்கு தோல்வியே மிஞ்சியது. விரக்தி அடைந்த இராபர்ட் புரூஸ் ஒரு மலைப் பகுதிக்குச் சென்றான். அங்கே இருந்த ஒரு குகைக்குள் நுழைந்து தன் நாட்களை வேதனையுடன் கழிக்கலானான்.

ஒருநாள் அந்த குகைக்குள் இருந்த சிலந்தி ஒன்று தனக்கான வலையைப் பின்னிக் கொண்டிருந்தது. வலை பின்னும் போது காற்றினால் நூலிழையைப் பிடித்தவாறு இங்கும் அங்கும் அந்த சிலந்தி ஆடிக் கொண்டிருந்தது. அந்த நூலிழையினை குகையின் சுவற்றில் ஒட்ட வைக்க வேண்டும். அப்போதுதான் தொடர்ந்து வலையைப் பின்ன முடியும். அந்த சிலந்தி இதற்காக பலமுறை போராடியது. ஆனால் அதனால் அந்த நூலின் முனையை குகைச் சுவற்றில் ஒட்ட வைக்க முடியவில்லை. குகைக்குள் உட்கார்ந்திருந்த இராபர்ட் புரூஸ் சிலந்தியின் இந்த போராட்டத்தை வியப்போடு பார்த்துக் கொண்டிருந்தான்.

சிலந்தியின் போராட்டம் சில மணி நேரம் தொடர்ந்து நடைபெற்றுக் கொண்டிருந்தது. ஆனால் சிலந்தி ஓயவே இல்லை. தொடந்து போராடி ஒரு கட்டத்தில் அது நூலிழையினை சுவற்றில் ஒட்டி தனது வலையினை வெற்றிகரமாகப் பின்னி முடித்தது. இதைப் பார்த்து ஆச்சரியப்பட்ட இராபர்ட் புரூஸின் மனதில் ஒரு வெற்றி பிறந்தது. ஒரு சின்னஞ்சிறு சிலந்தி போராடி அடைந்த வெற்றி அவன் மனதில் ஒரு புது உத்வேகத்தை ஏற்படுத்தியது. அங்கிருந்து உடனே புறப்பட்டுச் சென்று தனது படைவீரர்களை ஒன்று திரட்டினான்.  இராபர்ட் புரூஸ் இங்கிலாந்து படையினை தோற்கடிக்க வேண்டும் என்றவெறியோடு போர்க்களத்திற்குச் சென்றான். தனது வீரர்களை ஊக்கப்படுத்தி போர் நடத்தினான். இறுதிவரை தளராமல் போராடிய சிலந்திக்கு வெற்றி கிடைத்தது போல இராபர்ட் புரூசும் தனது வீரர்களைக் கொண்டு இங்கிலாந்து நாட்டுப் போர் வீரர்களை துரத்தி அடித்தான். வெற்றி வீரனாய் ஸ்காட்லாந்து தேசத்தின் வலிமையான மன்னனாய் பதவி ஏற்றுக் கொண்டான்.

தோற்று விட்டோமே என்று கவலைப் பட்டு மனதைத் தளர விடாதீர்கள். வருத்தப்பட்டு சோர்ந்து போய் உட்கார்ந்து விடாதீர்கள். விடுதலைப் போரில் காந்திஜி சந்திக்காத தோல்வி களா? அவமானங்களா? அவர் மனஉறுதியோடு அனைத்தையும் எதிர்கொண்டதால்தான் இன்று நாம் அவரை ‘தேசப்பிதா’ என்று அழைக்கிறோம்.

தற்காலத்தில் பெரும்பாலான பெற்றோர் கள் தங்கள் குழந்தைகளுக்கு வாழ்க்கையின் ஒரு அங்கமாக வெற்றியை மட்டுமே போதிக்கிறார்கள். மற்றொரு அங்கமான தோல்வியைப் பற்றி அவர்களுக்கு எடுத்துச் சொல்வதே இல்லை. இதன் காரணமாக எதிர்காலத்தில் அவர்கள் தோல்வியை சந்திக்கும் போது மனமுடைந்து போகிறார்கள். தோல்விகளை எவ்வாறு எதிர்கொள்ளுவது என்பது அவர்களுக்குத் தெரியவில்லை. உடனே ஒரு விபரீதமான முடிவினை எடுக்கிறார்கள். அது தற்கொலை. தோல்விக்கு முடிவு தற்கொலைதான் என்று ஒவ்வொருவரும் தீர்மானித்திருந்தால் இந்த உலகம் இவ்வளவு வளர்ச்சி பெற்றிருக்குமா? இந்த உலகத்தில் ஒரு மனிதன் கூட மிஞ்சி இருக்க மாட்டான்.

ஒவ்வொரு கண்டுபிடிப்பிற்குப் பின்னா லும் பல தோல்விகள் ஒளிந்துள்ளன என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும். மின்சார பல்பினைக் கண்டுபிடித்தவர் தாமஸ் ஆல்வா எடிசன் என்பது நம் அனைவருக்கும் தெரியும். ஆனால் அதற்காக அவர் எவ்வளவு உழைத்தார் என்பது ஒரு சிலருக்கு மட்டுமே தெரியும்.

பல்பு எரிய முக்கியமான ஒரு பொருள் டங்ஸ்டன். பல்பில் டங்ஸ்டனை பயன்படுத்தினால் வெற்றி பெறமுடியும் என்பதை அவர் சுமார் ஆயிரம் முயற்சிகளுக்குப் பின்னரே கண்டுபிடித்தார். அதற்கு முன்னால் மூங்கில் இழை, சிறு கம்பி முதலிய பல பொருட்களை இணைத்துப் பார்த்தார். ஆனால் அவை அனைத்தும் தோல்வியிலேயே முடிந்தன. இவ்வாறு ஆயிரம் தோல்விகளுக்குப் பின்னரே டங்ஸ்டன் இழையினை பல்பிற்குள் வைத்து சோதித்து வெற்றி கண்டார்.

அப்போது ஒரு நண்பர் அவரிடத்தில் கேட்டார்.

“ஆயிரம் முறை தோல்வியைச் சந்தித்தீர் களே. உங்களுக்கு கஷ்டமாக இல்லையா?”

“நிச்சயமாக இல்லை. ஒவ்வொரு முறையும் ஒரு சோதனையை எவ்வாறு செய்யக்கூடாது என்பதைத் தெரிந்து கொண்டேன். இறுதியில் வெற்றியும் பெற்றேன்”..

சாதனையாளர்கள் தங்களுடைய தோல்விகளை எப்படி எடுத்துக் கொள்கிறார்கள் என்பதையே இது காட்டுகிறது. தோல்விகளை தோல்விகளாகக் கருதாத காரணத்தினால்தான் சிலர் மட்டும் வாழ்க்கையில் வெற்றியைச் சந்திக்கிறார்கள்.

ஒவ்வொரு முறைதோற்கும் போதும் பெரியதொரு வெற்றியை நோக்கி நீங்கள் பயணிக்கிறீர்கள் என்பதை உணருங்கள். பதினைந்தாவது மாடிக்குச் செல்ல வேண்டுமென்றால் பதினான்கு மாடிகளை நீங்கள் நிச்சயம் கடந்துதான் ஆக வேண்டும். தோல்விப்படிகளை மெல்ல மெல்ல கடந்துதான் வெற்றியின் முகவரியை நீங்கள் அடைய முடியும். வெற்றியின் முகவரியை அடைய விரும்பினால் நிச்சயம் நீங்கள் தோல்விகளை சந்தித்துத்தான் ஆக வேண்டும். தோற்றுப் பாருங்கள். அப்போதுதான் வெற்றியின் முகவரி என்ன என்பது உங்களுக்குப் புரியும். வெற்றிகளும் உங்களைத் தேடி வரும்

July 25, 2015

மூளையைத் தூங்க விடாதீர்கள்!

பொதுவாக நினைவாற்றல் என்பது அனைவருக்கும் மாபெரும் தேவை. நினைவாற்றல் சுமாராக இருப்பவர்கள் கூட நினைவாற்றலை வளர்த்துக் கொள்ள மூன்று முக்கியமான வழிமுறைகளை கடைப்பிடிக்க வேண்டும்.
1. கவனமான பார்வை
2. ஆர்வம், அக்கறை
3. புதிதாகச் சிந்தித்தல்
இந்த மூன்றிற்குமே சிறப்பான பயிற்சி தேவை. அந்தப் பயிற்சிக்காக எந்தப் பயிற்சிக் கூடத்திற்கும் செல்ல வேண்டியதில்லை. நமக்கு நாமே பயிற்சி அளித்துக் கொள்ளலாம். அதற்கான சில பயிற்சி முறைகளைப் பார்ப்போம். முதலாவதாக ஒரு பயிற்சி.
ஒன்றிலிருந்து நூறு வரை எண்ணுங்கள். பிறகு 2,4,6 என்று இரண்டு இரண்டாக எண்ணுங்கள். பிறகு 100 லிருந்து தலைகீழாக, 100, 98 96, என்று இரண்டு இரண்டாகக் குறைத்து எண்ணுங்கள். பிறகு நான்கு நான்காகக் குறையுங்கள். இப்படியே 5,6,7 வரை தாவித் தாவி குறைத்து எண்ணுங்கள். இப்படி ஏழு ஏழாக குறைத்து எண்ணக் கற்றுக் கொண்டீர்கள் என்றால், உங்களுடைய நினைவுத் திறன் நல்ல அளவில் வளர்ந்திருக்கிறது என்று அர்த்தம்.
இப்போது ஓர் ஆங்கிலப் பத்தரிகையை எடுத்துக் கொள்ளுங்கள். அதில் ஒரு பத்தியில் எஸ். எழுத்தையெல்லாம் எண்ணிக் குறித்துக் கொள்ளுங்கள். அடுத்து இரண்டு மூன்று பத்திகளில் உள்ள ஏ எழுத்தையெல்லாம் எண்ணிக் குறித்துக் கொள்ளுங்கள். இப்போது மீண்டும் ஒரு முறை திருப்பிப் பார்த்தீர்கள் என்றால், எத்தனை எஸ் அல்லது ஏவை எண்ணாமல் விட்டிருப்பீர்கள் என்று தெரியவரும். அதை வைத்து உங்கள் நினைவுத் திறனின் அளவை நீங்கள் தெரிந்து கொள்ளலாம்.
புதிய சிந்தனை மூலமும் நினைவுத் திறனை வெகுவாக வளர்த்துக் கொள்ளலாம்.
தொலைக்காட்சியில் வரும் விளம்பரங்களைப் பாரங்கள். அந்த விளம்பரம் பற்றி கொஞ்சம் ஆராய்ச்சி பண்ணுங்கள். வேறு எந்த மாதிரி இந்த விளம்பரம் இருந்திருந்தால், இதைவிட நன்றாக இருந்திருக்கும் என்று சிந்தித்துப் பாருங்கள். சிந்திக்க சிந்திக்க மூளையின் சிந்திக்கும் ஆற்றல் வளர்வதோடு நினைவாற்றலும் பெருகும். முயன்று பாருங்கள்.
இதே போன்று இன்னொரு பயிற்சி. உங்கள் நெற்றியை கற்பனையாக நீங்களே 6 அறைகளாகப் பிரித்துக் கொள்ளுங்கள். ஒரு அறையை இழுங்கள். அதில் மறுநாள் 9 மணி புரோகிராம் என்று எழுதிப் போடுங்கள். (உதாரணமாக 9 மணிக்க ராம்கோபாலை சந்திக்க வேண்டும் என்று கற்பனையாக எழுதிப் போடுங்கள்). பிறகு அந்த அறையை இழுத்து மூடுங்கள்.
இதே போன்று இரண்டாவது அறையைத் திறந்து இன்னொரு புரோகிராம் எழுதிப் போடுங்கள். அதே போன்று அடுத்தடுத்த நான்கு அறைகளும், இப்படிச் செய்து விட்டால் இரவு படுக்கையில் படுத்ததும் உங்களுக்கே ஆச்சரியமாக இருக்கும். இந்த 6 புரோகிராம்களும் அடுத்தடுத்து உங்களை அறியாமலே உங்கள் மனதில் தோன்றும். இன்னும் இதே போன்று நீங்கள் கூட புதிய புதிய முறைகளைக் கையாண்டு உங்கள் நினைவாற்றலை வளர்த்துக் கொள்ளலாம்.
புத்தகங்களைப் படிப்பது, காலையில் ஐந்து மணிக்கெல்லாம் எழுந்திருந்து அன்றைய நிகழ்ச்சிகளைத் திட்டமிடுவது, அபிப்யாசங்கள் செய்வது இதனாலெல்லாம் கூட உங்கள் சிந்திக்கும் திறனையும், நினைவுத்திறனையும் வளர்த்துக் கொண்டே போகலாம்.
உடலின் ஒவ்வொரு உறுப்பும் ஓர் இயந்திரம். அதிலும் இதயமும், மூளையும், ஓய்வில்லாத இயந்திரங்கள். இதயம் ஓய்வு எடுத்துக் கொண்டால் வாழ்க்கை நின்று விடும். மூளைக்கு ஓய்வு கொடுத்தால் அது துருப்பிடித்துப் போய் ஒன்றுக்கும் பயனற்று வாழ்க்கை முன்னேற்றம் நின்று போய்விடும்.
ஆகையால் எந்த நேரமும் மூளைக்கு ஏதேனும் வேலை கொடுத்துக்கொண்டே இருங்கள். நினைவாற்றலை மேம்படுத்துங்கள். நினைத்ததைச் சாதியுங்கள்.

சாத்துக்குடி சாப்பிடுவதால் கிடைக்கும் பலன்கள்...!

நோயால் பாதிக்கப்பட்டு உடல் இளைத்தவர்கள் சாத்துக்குடியை சாற்றைப் பருகி வந்தால் உடலுக்கு புத்துணர்ச்சி உண்டாகும். உடலுக்கு வலு கொட...